எம்.ஏ.எம். ராமசாமியை சுற்றி இருப்பவர்களின் 'அரண்மனை சதி'.. போட்டுடைக்கும் வளர்ப்பு மகன் அய்யப்பன்
சென்னை: செட்டிநாட்டு அரசரான தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமியை சுற்றி இருப்பவர்களின் 'அரண்மனை சதியால்தான்' தமக்கும் தந்தைக்கும் பிரச்சனை ஏற்பட்டிருப்பதாக அவரது வளர்ப்பு மகன் அய்யப்பன் தெரிவித்துள்ளார்.
தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமியின் சுவீகார மகன் அய்யப்பன். இவர் சென்னையில் தந்தைக்கும் தமக்கும் உள்ள பிரச்சனைகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அய்யப்பன் வெளியிட்ட அறிக்கை விவரம்:
1995ம் ஆண்டு செட்டி நாடு அரச குடும்பத்தின் 3வது தலைமுறையின் வாரிசான எனது தந்தை டாக்டர் எம்.ஏ.எம்.ராமசாமி மற்றும் எனது தாயார் சிகப்பு ஆச்சிக்கும் நேரடி வாரிசு இல்லாததால் எனது தாயார் சிகப்பி ஆச்சியின் நீண்ட வற்புறுத்தலுக்கு இணங்கி அமெரிக்காவில் முழு கல்வித் தகுதியுடன், நிறைவான வாழ்க்கையில் இருந்த நான் சட்டப்படி சுவீகாரம் எடுக்கப்பட்டேன்.
தொடர்ந்து எனது தாயார் சிகப்பு ஆச்சி அவர்களின் அன்பிலும் அரவணைப்பிலும் வளர்க்கப்பட்டு எனது தந்தை எம்.ஏ.எம். ராமசாமி அவர்களின் ஆசிகளோது எல்லோருடைய அன்புனையும், மதிப்பையும் பெற்று செட்டிநாடு பாரம்பரியத்தின் அங்கமானேன். 1998ல் என் பெற்றோரின் ஆசியோடு எனக்கு திருமணம் நடைபெற்று அரண்மனை வாரிசுகளாக இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்து வளர்ந்து வருகிறார்கள்.
எனது தந்தை எம்.ஏ.எம். ராமசாமி, அவரை சுற்றி இருந்தவரிகளின் நெருக்கடியால், எங்கள் குடுமபத்தினருடன் அதிக நெருக்கமோ, உணர்வு பூர்வமான உணர்வுகளையோ வெளிக்காட்டிகொண்டதில்லை. அவரை சுற்றி இருந்த வேலைக்காரர்களிடம் காண்பித்த நெருக்கதை அவருடைய பேரக்குழந்தைகள் மீது கூட அவரை சுற்றி உள்ளவர்கள் காட்ட அனுமதிக்கவில்லை.
எனினும், என்னுடைய சுறுசுறுப்பு, இடைவிடாத உழைப்பு, பொருளாதார ஒழுக்கம் காரணமாக, என் தந்தையார் செட்டிநாடு நிறுவனங்களின் பொறுப்புகளை படிப்படியாக எனக்கு அளித்து, எனது தலைமையின் கீழ் அனைத்து நிறுவனங்களும் செயல்பட ஆரம்பித்த இந்த இருபது ஆண்டுகளில் செட்டி நாடு குழுமங்கள் கண்ட வளர்ச்சி அபரிமிதமானது. எங்கள் நிறுவனங்களின் கடந்த கால ஆண்டு அறிக்கைகளே அதற்கு சான்று ஆகும்.
செட்டிநாடு அரண்மனையில் அங்கமாகிவிட்ட பின்னும் அதனுடைய ஆடம்பரங்களில் இருந்து எப்போதும் நான் விலகியே இருந்தேன். எளிய வாழ்க்கை முறை, முழு நேர உழைப்பு, பொருளாதார ஒழுக்கம், நல்ல சமூக சிந்தனைகளே என்னுடைய வாழ்க்கை முறையாக எப்போதும் இப்போதும் இருந்து வருகிறது. எனது தந்தையின் ஒரே விருப்பமான குதிரை பந்தயங்களில் கூட நான் அதிக ஆர்வம் காட்டியதில்லை.
பறிபோன அண்ணாமலை பல்கலை.
எனது தந்தை எம்.ஏ.எம்.ராமசாமி அவர்களின் நிர்வாத்தின் கீழ் இருந்த அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்திலோ அதன் செயல்பாடுகளிலோ எனது தந்தையார் எப்போதும் என்னை அனுமதிக்கவில்லை. அதன் பின் ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேட்டின் காரணமாக பாரம்பரியமிக்க அக்கல்வி நிறுவனம் அரசால் கையகப்படுத்தப்பட்டதை நீங்கள் அறிவீர்கள்.
அண்ணாமலை பல்கலைக்கழகம் எனது தந்தையார் வசம் இருந்தபோது அவரை சுற்றி இருந்தவர்கள் என் தந்தையையும், பல்கலைக்கழக நிர்வாகத்தையும் ஏமாற்றி பலவகைகளில் பலன் அடைந்து வந்தனர். பல்கலைக்கழகம் அரசால் கையகப்படுத்தப்பட்ட பின்பு அவரை சுற்றி இருந்தவர்கள் இத்தனை ஆண்டு காலம் அனுபவித்து வந்த செல்வாக்கும்,
சுற்றியிருப்போர் சதி
சலுகைகளும் திடீரென பறிபோனதால், எனது தந்தையாருக்கு தவறான அறிவுரைகளை வழங்கி, செட்டிநாடு குழுமங்களில் உள்ள மற்ற நிறுவனங்களை கைப்பற்ற நடந்த சூழ்ச்சியை, நிறுவனங்களின் நலன் கருதியும், அதன் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களின் எதிர்காலம் கருதியும், முக்கியமாக, அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு நேர்ந்த கதி செட்டிநாடு நிறுவனங்களுக்கு நேரக்கூடாது என்ற அடிப்படையில் நான் மேற்கொண்ட சில தீவிரமான முயற்சிகளை, என் தந்தையாரை சுற்றி இருந்த நபர்கள் தவறாக திரித்து கூறியதன் அடிப்படையில் என் தந்தையார் என் மீது கோபம் கொண்டார். தொடர்ந்து என் தந்தையாருக்கு நெருக்கமானவர்கள், செட்டிநாடு நிர்வாகங்களில் பல குறுக்கீடுகளை செய்து, எனக்கும் என் தந்தையாருக்கும் நடுவில் எழுந்த ஒரு சிறு இடைவெளியை பயன்படுத்தி அவர்கள் என் தந்தையிடம் பலன் அடைந்து வந்தனர்.
இதனிடையில், கடந்த 2014 ஆகஸ்ட் மாதம் செட்டி நாடு சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள், நிறுவனத்தின் நலன் கருதியும், எனது தந்தையின் முதிர் வயதை கருத்தில் கொண்டும் பங்குதாரர்கள் அவரை மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கவில்லை. ஆனாலும் அவர் செட்டிநாடு சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிரந்தர தலைவராக நியமிக்கப்பட்டார். எனினும், சட்டப்படி நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டத்தினை தடை செய்யும் நோக்கத்துடன் தவறான வழிகாட்டுதலின் பேரில் சட்டத்திற்கு புறம்பான சில முயற்சிகள் எடுக்கப்பட்டதாக பின்னர் நான் அறிந்து கொண்டேன். அந்த தவறான முயற்சி இன்று அவரை சிபிஐ முன்பு ஒரு குற்றவாளியாக நிறுத்தி உள்ளது என்பது மிகுந்த வேதனைக்குரிய விஷயம்.
அரண்மனையை விட்டு வெளியேற்ற சதி
என் வளர்ச்சியின் மீதும், எங்கள் நிறுவனங்களின் அபரிமிதமான வளர்ச்சியின் மீதும் பொறாமை கொண்ட எங்கள் சில உறவு வட்டங்கள் மற்றும் என் தந்தையை சுற்றி உள்ள நபர்கள் என் தந்தையை தவறான வழியில் நடத்தி, என்னையும் என் குடும்பத்தாரையும் செட்டிநாடு அரண்மனையை விட்டு விரட்ட செய்யும் நோக்கில் பல வழக்குகளை தாக்கல் செய்து, அவற்றை சட்டப்படி நான் எதிர்கொண்டு வருகிறேன். என்னை வெறியேற்ற போலி ஆவணங்களை கூட தயார் செய்ய தயங்கவில்லை என் தந்தையை சுறிறி உள்ளவர்கள். எங்கள் குடும்ப அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாக்கும் பொருட்டு நானும் சில வழக்குகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து சட்டப்படி வழக்குகளை எதிர்கொண்டு நடத்தி வருகிறேன்.
என் தந்தையின் முதிர் வயதை தங்களுக்கு சாதகமாக்கி என்னையும் என் குடும்பத்தாரையும் அரண்மனையைவிட்டு வெளியேற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த என் தந்தையை சார்ந்தவர்களால், எனக்கும் என் குடும்பத்தாருக்கும் தொடர்ந்து உயிர் அச்சுறுத்தல் இருந்து வந்தது. என் தந்தையை சார்ந்தவர்களால் என் குடும்பத்திற்கு எவ்வித ஆபத்தும் நிகழ்ந்துவிட கூடாது என்ற அச்சத்தில் அவர்களை சிங்கப்பூரில் குடியமர்த்தி உள்ளேன். தனியார் செக்யூரிட்டி நிறுவன பாதுகாப்பில் நான் எங்கள் அரண்மனையில் தங்கி நிறுவனங்களை நிர்வகித்து வருகிறேன்.
நடந்தது என்ன?
இந்த நிலையில் கடந்த 23.05.2015 அன்று நான் என் குடும்பத்திருடன் சிங்கப்பூரில் இருந்தபோது, அரண்மனையில் நான் பயன்படுத்தி வந்த எனது அலுவலக அறையை என் தந்தையாரின் ஆட்கள் உடைத்து அத்துமீறி நுழைய முற்பட்டபோது, எங்கள் நிறுவனத்தின் பாதுகாவலர்கள் மூலம் இந்த முயற்சி முறியடிக்கப்பட்டு பின்பு அது புகாராக காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. அன்றிரவு சுமார் 11.30 அளவில் நான் சிங்கப்பூரில் இருந்து திரும்பி அரண்மனைக்கு வந்தபோது, நான் வரும் வழியை அடைத்து என்னை உள்ளே நுழைய விடாமல் தடுத்து, எனக்கு பாதுகாப்பாக வந்த எங்கள் நிறுவன பாதுகாப்பு ஊரியர்களை எனது தந்தையாரின் உதவியாளர் ராஜேந்திரனின் தூண்டுதலின் பெயரில் அரண்மனை வேலையாட்கள் கடுமையாக தாக்கினார்கள். இந்த தகவல் உடனடியாக எங்கள் மூலம் காவல்துறைக்கு தெரியப்படுத்தப்பட்டு அவர்கள் தலையீட்டின் பேரில் காயமடைந்த எங்கள் காவலர்களை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தேன்.
மறுநாள் 24.05.2015 காலை சுமார் 8.30 மணிக்கு ராஜேந்திரனின் தூண்டுதலின் பேரில் ஜேம்ஸ் மாமல்லன் தலைமையில் சுமார் 200 அடியாட்கள் அரண்மனைக்குள் அத்துமீறி நுழைந்த ஆபாச வார்த்தைகளை கூறி கொலை மிரட்டல் விடுத்தனர். நான் செல்லும் வழியினையும் மரச்சட்டங்கள் கொண்டு அடைத்து விடடனர். உடனடியாக நாங்கள் காவல்துறைக்கு தெரியபடுத்தியதின் பேரில் சுமார் 11 மணி அளவில் காவல் உயர் அதிகாரிகள் நேரடியாக வந்த அவர்கள் தலையீட்டில் 14 பேர் அந்த இடத்தில் வைது செய்யப்பட்டு மற்றவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். பின்பு எனது தந்தையார் அறையில் நடந்த சமாதான பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டு காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் அடைக்கப்பட்ட கதவு திறக்கப்பட்டது. நடந்த மொத்த சம்பவங்களும் தற்போது காவல்துறையின் விசாரணையில் உள்ளது.
சட்டப்படி எடுக்கப்பட்டு 20 வருடங்களாக அங்கீகரிக்கப்பட்ட என் சுவீகாரத்தை சட்டப்படி இரத்து செய்ய எவ்வித முகாந்திரமும் இல்லாத நிலையிலும், அரண்மனை தர்பார் வாழ்க்கைக்கு நான் உடன்படாததாலும், என்னை அரண்மனையிலிருந்து வெளியேற்றும் முயற்சியின் ஒரு பகுதிதான் சமீபத்தில் நடந்த சம்பவங்கள். சட்டத்திற்கு புறம்பான வகையில் என்னை அரண்மனையை விட்டு வெளியேற்றி எங்கள் நிறுவனங்களில் உள்ளே நுழைந்து நிர்வாக சீர்கேட்டை ஏற்படுத்துவது தான் என் தந்தையை சுற்றி உள்ளவர்களின் எண்ணம். அதன் மூலம் என்னுடைய வளர்ச்சியினையும் எங்கள் நிறுவனங்களின் வளர்ச்சியினையும் முற்றிலுமாக முடக்கி வைப்பதே அவர்களின் நோக்கம்.
நிறைவாக, இதுவரையிலும் எந்த தவறும் இழைக்காமல், நிறுவனங்களின் வளர்ச்சியையும், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும், செட்டிநாடு குழுமத்தின் எதிர்காலத்தையும் மட்டுமே முன்னிறுத்தி செயல்பட்டு வரும் நான், பல சமரச பேச்சுவார்த்தைகளின் போதும் பிர்ச்சனைக்கு முற்றுபுள்ளி வைக்கும் நோக்கிலும் என் தந்தை அவரை சுற்றி உள்ளவர்களிடம் இருந்து விடுபட்டு எங்களோடு இணைய வேண்டும் எனற எண்ணத்திலும் பல தடவை அவரிடம் மன்னிப்பு கேட்டு இருக்கிறேன். இந்த பிரச்சனை மட்டும் அல்ல. எந்த பிரச்சனையுமே எனக்கும் என் தந்தைக்கும் உள்ள உறவை பிரிக்க முடியாது. சராசரி இந்திய வணிக குடும்பங்களில் நிகழும் சாதாரண இந்த குடும்ப பிரச்சனைக்கு முற்று புள்ளி வைக்க எப்போதும் தயாராகவே இருந்து வந்துள்ளேன். இப்போதும் நிறுவனங்களின் நலன் கருதியும், அதன் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களின் நலன் கருதியும் மிக முக்கியமாக என் தந்தையின் முதிர் வயதை கருத்தில் கொண்டும் இந்த பிரச்சனைக்கு நியாயமான, சமரச தீர்வினை ஏற்று கொள்ள எப்போதும் போல் இருப்போம் தயாராக உள்ளேன்.
இவ்வாறு அய்யப்பன் கூறினார்.