அரசுப் பணியாளர்களுக்கான தேர்வில் வெளிப்படைத் தன்மை தேவை !! ஸ்டாலின் வலியுறுத்தல் !!!
சென்னை : அரசுப் பணிகளுக்கு நியமனம் செய்யும் தேர்வு முறையில் வெளிப்படைத் தன்மையை நிலை நாட்ட தமிழக அரசு முன் வராதது கவலையளிப்பதாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஸ்டாலின் தனது முக நூலில் கூறியுள்ளதாவது....
ஏற்கனவே வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தமிழகம் முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு 85 லட்சம் பேர் காத்திருக்கிறார்கள்.
அது போன்ற சூழலில் அரசு பணிகளுக்கு நியமனம் செய்ய நடைபெறும் தேர்வு முறையில் வெளிப்படைத் தன்மையை நிலைநாட்ட தமிழக அரசு முன்வராதது கவலையளிக்கிறது.
4362 ஆய்வக உதவியாளர் பதவிகளை எழுத்துதேர்வு மூலமே நியமிக்க முடியும் என்றாலும், திடீரென்று அந்தப் பதவிகளுக்கும் நேர்காணல் நடத்தித்தான் நியமிப்போம் என்று கூறியுள்ளது முறையல்ல.
இந்த விஷயம் இப்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் விசாரணையிலும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. படித்த இளைஞர்கள் அரசிடமிருந்து நேர்மையான, நியாயமான தேர்வுமுறையை எதிர்பார்க்கிறார்கள்.
ஆகவே, அரசு பணிகளுக்கான நியமனத்திற்கு நடைபெறும் தேர்வுகளில் முழுமையான வெளிப்படைத் தன்மையை கடைப்பிடிக்கும்படி அ.தி.மு.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தனது முக நூலில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.