ஹஜ் பயணிகளுக்கான மானியம் ரத்து? மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்
ஹஜ் புனித பயணம் மேற்கொள்வோர்களுக்கு வழங்கப்படும் மானியத்தை அடுத்த ஆண்டு முதல் ரத்து செய்ய மத்திய அரசு முயற்சிப்பதற்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஹஜ் புனித பயணிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தை அடுத்த ஆண்டு முதல் ரத்து செய்ய மத்திய அரசு முயற்சிப்பதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்வதை குறைக்கும் விதமாக வரும் 2018-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை ஹஜ் பயணிகளுக்கு மானியத்தை ரத்து செய்ய 5 நபர் குழு பரிந்துரை செய்துள்ளது. அந்த பரிந்துரை கடிதம் மத்திய சிறுபான்மை துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியிடம் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த கொள்கை முடிவானது 2022-ஆம் ஆண்டுக்குள் ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை கணிசமாக குறைக்க வேண்டும் என்று மத்திய அரசை கடந்த 2012-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டதற்கிணங்க உருவாக்கப்பட்டது.
மேலும் இத்தனை நாள்களாக அரசு அறிவித்த 21 இடங்களில் ஹஜ் பயணிகள் குவிந்து விமானத்தில் ஏற்றிக் கொள்ளப்பட்டனர். ஆனால் அந்த இடங்களை 9-ஆக குறைத்தும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. டெல்லி, லக்னோ, கொல்கத்தா, அகமதாபாத், மும்பை, சென்னை, ஹைதராபாத், பெங்களூர், கொச்சி ஆகிய இடங்களில் மட்டுமே பயணிகள் ஏற்றிக் கொள்வது என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ஹஜ் மானியத்தை ரத்து செய்யும் பரிந்துரையை மத்திய சிறுபான்மை துறை அமைச்சகம் ஏற்க கூடாது. இஸ்லாமியர்களுக்கு ஹஜ் மானியம் தொடர்ந்து வழங்குப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றார்.