மல்லையாவின் பீர் ஆலையை மூடுங்கள்...கேட் மீது ஏறி நின்று போராடிய பட்டதாரிப் பெண்!
திருவள்ளூர் : விஜய் மல்லையாவின் பீர் ஆலையை மூடக் கோரி திருவள்ளூர் அருகே அரண்வாயலில் பட்டதாரி பெண் தனியாக நின்று தொழிற்சாலை கேட்டில் ஏறி போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுவிற்கு எதிராக எம்.பில் பட்டதாரியான நர்மதா தொடர்ந்து போராடி வருகிறார். சென்னை அண்ணா நகரில் வசித்து வரும் நர்மதா தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மட்டுமின்றி மது ஆலைகளையும் மூட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மதுப்பழக்கத்தால் ஏற்கனவே தனது தந்தையை இழந்து விட்ட நர்மதா, தற்போது தனது கணவரும் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி தனது வாழ்க்கையே சீரழிந்து விட்டதாக நர்மதா குற்றஞ்சாட்டியுள்ளார். மது பழக்கத்தால் பல பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளதாகவும் நர்மதா குரல் எழுப்பினார்.
விஜய் மல்லையா பீர் பேக்டரி
இந்நிலையில் நர்மதா இன்று காலையில் திடீரென திருவள்ளூர் அருகே அரண்வாயலில் உள்ள விஜய் மல்லையாவின் பீர் ஆலையை மூடக் கோரி தனித்து போராட்டம் நடத்தினார். பீர் ஆலையின் கேட் மீது ஏறி நின்று நர்மதா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
|
தனியாக போராட்டம்
மதுவால் பல ஏழை குடும்பங்கள் மிகவும் கஷ்டத்தில் இருந்து வருவதாகவும், பல பெண்கள் தாலி இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் நர்மதா கூறியுள்ளார். முதலில் நான் தனியாக மட்டுமே இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன், இதனை பார்த்து பல ஆயிரம் பெண்கள் ஒன்றாக கூடி கூட்டு போராட்டமாக இது நிச்சயம் மாறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நர்மதா கைது
போராட்டத்தில் ஈடுபட்ட நர்மதாவை பாதுகாவலர்கள் தடுத்தி நிறுத்தியும் கேட்காததால் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து போலீசார் கூறியும் கேட்காததால் திருவள்ளூர் மகளிர் போலீஸ் நர்மதாவை கைது செய்துள்ளனர்.
வீரியம் பெறும் போராட்டங்கள்
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள், குழந்தைகள் டாஸ்மாக் கடைகளை சூறையாடி வருகின்றனர். இந்நிலையில் நர்மதா தனி ஆளாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.