வர்ஷாவின் நைட்டியில் புகுந்து பதுங்கிய மதன்.. வம்சம் டிவி சீரியல் பார்த்திருப்பாரோ?
டிவி சீரியல்களில் பெண்கள் வேடமிட்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்வது போல வேந்தர் மூவிஸ் மதனும் கடந்த 6 மாத காலமாக பல வேடங்களில் தலைமறைவாக சுற்றி வந்துள்ளார்.
சென்னை : திருப்பூரில் மூன்றாவது மனைவியின் வீட்டில் நைட்டி, உள்பாவடை அணிந்து படுக்கை அறையின் ரகசிய அறையில் பதுங்கியிருந்த மதனை கொத்தாக அள்ளி வந்து தனது பாணியிலான விசாரணையை தொடங்கியுள்ளது போலீஸ்
காசிக்கு சென்று கங்கையில் சமாதியாக போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு போன மதன் ஊர் ஊராக போய் உல்லாச வாழ்க்கை அனுபவித்ததும், பெண்களின் நைட்டியை அணிந்து கொண்டு தலைமறைவாக வாழ்ந்ததும் தற்போது வெளியாகியுள்ளது.
6 மாதங்களுக்கு முன்னர் சென்னையில் இருந்து கிளம்பிய மதன், உத்தரகாண்ட், ஹரித்துவார், கோவா என சுற்றியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருப்பூரில் உள்ள தன்னுடைய பெண் தோழி வர்ஷாவின் வீட்டில் குடியேறினார்.
ஆடம்பர பங்களாவில் வாழ்ந்து வந்த மதன் பகலில் வெளியே எங்கேயும் செல்லாமல் இரவில் மட்டும் விலை உயர்ந்த பைக்கில் ஹெல்மெட் அணிந்து உலா வந்துள்ளார்.
இந்த தகவல் காவல்துறைக்கு கிடைக்க வசமாக மதனை பிடிக்க திட்டமிட்டனர்.
இரவில் நடமாடிய மதன்
அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரிக்க பகலில் எந்த நடமாட்டம் இல்லாமல் இருக்கும் இரவில் மட்டும் மதன் நடமாடுவது தெரிய வந்தது. ஞாயிற்றுக்கிழமை இரவில் இருந்தே சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை போலீசார் வர்ஷா வீட்டை மாறுவேடத்தில் கண்காணித்தப்படி இருந்தனர்.
வர்ஷாவை பின் தொடர்ந்த போலீஸ்
ஞாயிற்றுக்கிழமை இரவு வர்ஷா திடீரென்று காரில் வெளியே புறப்பட்டு சென்றார். தனிப்படை போலீசாரும் இன்னொரு காரில் பின் தொடர்ந்து சென்றனர்.
வர்ஷா திருப்பூர் கடைவீதிக்கு சென்று கேக், ஐஸ்கீரிம் மற்றும் ஏராளமான இனிப்பு வகைகளை வாங்கினார். ஒரு பூச்செண்டு ஒன்றையும் வாங்கி வந்தார். வீட்டுக்கு வந்தவுடன் போலீசார் அதிரடியாக வர்ஷாவின் வீட்டுக்குள் நுழைந்தனர். அந்த வீட்டில் இருந்த வர்ஷாவை விசாரித்த போது மதன் யாரென்றே தனக்கு தெரியாது எனவும் இங்கு யாரும் இல்லை எனவும் உறுதியாக இருந்துள்ளார்.
போலீஸ் சோதனை
வீடு முழுவதும் தேடியும் மதனை காணமுடியாமல் காவல்துறையினர் திகைத்தனர். வீட்டின் மேல்மாடியிலும், தரைதளத்திலும் போலீசார் சோதனை போட்டபோது, மதனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் சோர்ந்து போன போலீசார் வெளியேறினர். எனினும் தொடர்ந்து கண்காணித்தபடியே இருந்தனர்.
அதிகாலையில் விசாரணை
திங்கட்கிழமையன்று அதிகாலையில் மீண்டும் வர்ஷாவின் வீட்டுக்குள் சென்று சோதனை போட்டனர். தூங்கிக்கொண்டிருந்த வர்ஷா, அவருடைய மகன்கள், தாயார் ஆகியோரை வீட்டின் கீழ் தளத்தில் வைத்து விசாரித்தனர். மதன் அங்கு இல்லை என்று வர்ஷா தொடர்ந்து சாதித்தபடி இருந்தார். திடீரென்று வர்ஷா கையில் வைத்திருந்த செல்போனை வாங்கி போலீசார் ஆய்வு செய்தனர்.
காட்டிக்கொடுத்த வர்ஷா
செல்போனில் மதனுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட படங்கள் வர்ஷாவை போலீசாரிடம் சிக்க வைத்துவிட்டன. வர்ஷா வேறுவழி இல்லாமல் மேல் மாடியில் மதன் தங்கி இருப்பதை ஒப்புக்கொண்டார். மதன் ரகசிய அறையில் இருப்பதை வர்ஷா போலீசாருக்கு காட்டிக்கொடுத்தார்.
நைட்டியில் வாழ்ந்த மதன்
படுக்கையறையால் தான் மதன் இருப்பதாக வர்ஷா கூறவே, தேடிச்சென்ற போலீசுக்கு ஏமாற்றமே கிடைத்தது. அந்த அறையில் உள்ள அலமாறியின் பின்னே ஒரு ரகசிய அறை உள்ளது அதில் மதன் இருப்பதாக கூறினார் வர்ஷா. அலமாறியை நகர்த்த முயன்றபோது அதனை நக்ர்த்த மிகவும் சிரமப்பட்டனர் காவல்துறையினர்.
தீவிர முயற்சிக்கு பின்னர் அதனை திறந்தனர். நைட்டியுடன் மதன் சுருண்டு படுத்திருப்பதை கண்டுபிடித்து கைது செய்தனர்.
பிறந்தநாளில் கைது
மதனுக்கு திங்கட்கிழமை 45வது பிறந்தநாள் என்றும், பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடுவதற்காக கேக் வாங்கியதாகவும், மதனுக்கு வாழ்த்து சொல்வதற்காக பூச்செண்டு வாங்கியதாகவும் வர்ஷா போலீசாரிடம் கூறினார். மதன் தனது 45வது பிறந்தநாளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். வேந்தர் மூவிஸ் மதனின் தலைமறைவு வாழ்க்கை சினிமா போலவும், டிவி சீரியல் போலவும் இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.
போலீஸ் பிடியில் மதன்
மதனை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கி உள்ளது. மதனை பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் நேற்று இரவில் விசாரணை நடத்தினார். மோசடி செய்த பணத்தை எந்தெந்த வகையில் செலவழித்தார். எங்கெங்கு சொத்துகள் வாங்கி உள்ளார் என்பது பற்றிய விவரங்களை மதனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.