சிலைக் கடத்தல் வழக்கு.. சிபிஐ விசாரணைக்கு மாற்றியது ஏன்?.. ஹைகோர்ட் சரமாரி கேள்வி
சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடந்து வரும் நிலையில், சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றியது ஏன் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் கேட்டுள்ளார்.
தமிழகத்தில் சிலைக் கடத்தல் வழக்குகள் படு சூடாகியுள்ளன. பல முக்கிய தலைகள் இதில் அடிபடப் போவதாக சமீப காலமாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஐஜி பொன் மாணிக்கவேல் அதிரடியாக விசாரித்து வருகிறார். பலர் சிக்கியுள்ளனர். பல முக்கியப் பிரமுகர்கள் அவரது விசாரணை வளையத்திற்குள் வரவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த நிலையில் அதிரடியாக இந்த வழக்குகளை சிபிஐக்கு மாற்றப் போவதாகவும், அதுதொடர்பான கொள்கை முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் நீதிபதி மகாதேவனிடம் தெரிவித்தது. இது அனைத்துத் தரப்பையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
அனைத்து முக்கிய எதிர்க்கட்சிகளும் இந்த முடிவுக்கு கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளன. பாஜகவும் கூட எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது பொன் மாணிக்கவேலின் விசாரணையை சீர்குலைக்கும் முயற்சி என்று அனைவரும் கண்டித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று இதுதொடர்பான வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி மகாதேவன் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த பாண்டியனிடம் இதுதொடர்பாக சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.
- ஐஜி பொன் மாணிக்கவேல் விசாரணைக்கு உத்தரவிட்டது நான்தான்
- ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலன விசாரணைக் குழு விசாரணை நடத்தி வருகிறது.
- விசாரணைக்குழுவின் விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் சிபிஐக்கு வழக்குகளை மாற்றியது ஏன் நான் அமைத்த விசாரணைக் குழு கதி என்னாகும்.
- பொன் மாணிக்கவேல் தொடர்ந்து விசாரணை நடத்துவாரா என்று சரமாரியாக நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த வழக்கறிஞர் அரவிந்த பாண்டியன், பொன் மாணிக்கவேல் விசாரணை தொடர்ந்து நடைபெறும். ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளை அவர் விசாரிப்பார். இனிமேல் புதிதாக வரும் வழக்குகளை மட்டுமே சிபிஐ விசாரிக்கும் என்று வழக்கறிஞர் அரவிந்த பாண்டியன் விளக்கம் அளித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு காத்திருக்கவும்.