எடப்பாடி பழனிச்சாமிக்கு குறி வைக்கும் ஸ்டாலின் - நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு நாளை விசாரணை
எடப்பாடி பழனிசாமி அரசு நம்பிக்கை தீர்மானத்தில் வெற்றிபெற்றதை எதிர்க்கும் வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
சென்னை: எடப்பாடி பழனிசாமி அரசு நம்பிக்கை தீர்மானத்தில் வெற்றிபெற்றதை எதிர்க்கும் வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை நாளை விசாரிக்க தலைமை நீதிபதி இந்திரா அனுமதி அளித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு, வரும் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருந்த நிலையில், வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணப்பட்டுவாடா செய்ததாகக் கூறி தேர்தலை ரத்துசெய்தது, தலைமைத் தேர்தல் ஆணையம். முன்னதாக, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து வருமான வரித்துறையினரால் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில், எந்ததெந்த அமைச்சர்கள் எவ்வளவு பணம் ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற பட்டியல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதை ஒரு காரணமாக வைத்தும் இடைத்தேர்தல் ரத்துசெய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பணம் கொடுக்கும் பட்டியலில் உள்ள முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவுசெய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பறக்கும் படைகள் இருந்தும் பண விநியோகம் தங்குதடையின்றி எப்படி நடந்தது எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்டாலின் வழக்கு
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அரசு நம்பிக்கை தீர்மானத்தில் வெற்றிபெற்றதை எதிர்க்கும் வழக்கை விரைந்து முடிக்கவும் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். சட்டசபையில் கடந்த மாதம் 18ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது.
ரகசிய வாக்கெடுப்பு
நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் சபாநாயகர் தனபால் இதை நிராகரித்துவிட்டார். இதனால் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குள்ளேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்டசபையில் கலாட்டா
சட்டசபையில் தர்ணா போராட்டம் நடத்திய திமுக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். அப்போது மார்ஷல் சீருடையில் போலீஸ் உயர் அதிகாரிகள் சட்டசபைக்குள் நுழைந்து எம்எல்ஏக்களை வெளியேற்றினர். இதில் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் கடுமையாக தாக்கப்பட்டனர்.
ஹைகோர்ட்டில் வழக்கு
நம்பிக்கை வாக்கெடுப்பு முறைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார். அதே போன்று பாமக வழக்கறிஞர் பாலுவும் இதனை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
விரைந்து முடிக்க முறையீடு
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அரசு நம்பிக்கை தீர்மானத்தில் வெற்றிபெற்றதை எதிர்க்கும் வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஸ்டாலின் சார்பாக முறையீடு செய்யப்பட்டது. இதனையடுத்து ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை நாளை விசாரிக்க தலைமை நீதிபதி இந்திரா அனுமதி அளித்துள்ளார்.