சரவணன் எம்எல்ஏவின் பரபரப்பு வீடியோ.. சிபிஐ விசாரிக்க ஸ்டாலின் மனு.. உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை
ஆட்சியைக் காப்பாற்ற கோடி கோடியாய் பணம் விளையாடிய திடுக்கிடும் தகவல் வெளியான வீடியோ பற்றி சிபிஐ விசாரிக்க மு.க.ஸ்டாலின் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது
சென்னை: அதிமுக எம்எல்ஏ லஞ்சம் பெற்றதாக வெளியான வீடியோ குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று திமுக மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் உயர்நீதிமன்ற முதன்மை அமர்வில் முறையீடு செய்தார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
சசிகலா அணியை ஆதரிக்க வேண்டும் என்பதற்காக 122 அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டனர். பிப்ரவரி 7ஆம் தேதி முதல் 18ஆம் தேதிவரை எம்எல்ஏக்கள் கூவத்தூரில் கைதிகள் போல கிடந்தனர்.
அங்கிருந்து கொண்டு வரப்பட்ட எம்எல்ஏக்கள் முதல்வர் பழனிச்சாமிக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்தனர். இதில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றார்.
கோடி கோடியாய் பணம்
இந்த வாக்கெடுப்பின் போது எடப்பாடி அணிக்கு ஆதரவளிக்க லஞ்ச பேரம் நடந்ததாக வெளியான வீடியோ தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. லஞ்சம் கொடுத்து ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ள இந்த அரசு நீடிக்கக் கூடாது என்று திமுக செயல்தலைவரும், சட்டசபை எதிர்கட்சித்தலைவருமான ஸ்டாலின் கூறினார்.
நீதிமன்றத்தில் முறையீடு
இதனிடையே எம்எல்ஏக்களுக்கு பேரம் பேசப்பட்ட விவகாரத்தை சிபிஐ அல்லது வருவாய்துறையினர் கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் உயர்நீதிமன்ற முதன்மை அமர்வில் முறையீடு செய்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு
ஜூலை 11ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க என்றும் திமுக தரப்பில் கோரப்பட்டது. இதனையடுத்து உரிய ஆதாரங்களுடன் மனுவாக தாக்கல் செய்தால், திமுகவின் முறையீடு குறித்து வரும் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று விசாரணை நடத்தப்படும் என உயர்நீதிமன்றம் அறிவித்தது.
நாளை விசாரணை
இதனைத் தொடர்ந்து, திமுக தரப்பில் இருந்து உரிய ஆதராங்கள் மனுவாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாணைக்கு வர உள்ளது.