மேலூர் தினகரன் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளிக்க கோர்ட் உத்தரவு!
மதுரை மேலூரில் டிடிவி தினகரன் தலைமையில் வரும் 14ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி தர சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை: மேலூரில் தினகரன் தலைமையில் வரும் 14ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி தர சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அதிமுக அம்மா அணியில் இருந்து தினகரன் நீக்கப்பட்டுள்ள நிலையில், அவர், நீக்கம் செல்லாது என்றும், அதிமுகவை வளர்க்க பாடுபடப்போவதாகவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இதனையடுத்து கட்சியைப் பலப்படுத்த தினகரன் களம் இறங்கியுள்ளார்.
முதன் முதலாக அவர் மதுரை மேலூரில் வரும் 14ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளார். இந்த நிலையில் இன்னும் சில நாட்களே பாக்கியுள்ள நிலையில், பொதுக்கூட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.
இதனால் தினகரன் தரப்பினர் அப்செட் ஆகினர். இதையடுத்து மதுரை மேலூரில் ஆகஸ்ட் 14ம் தேதி நடக்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு அனுமதி வழங்க கோரி, சரவணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவசர மனு தாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, மேலூர் தினகரன் பொதுக்கூட்டத்துக்கு போலீஸ் அனுமதி தர உத்தரவிட்டுள்ளது. மேலும், கூட்டத்துக்கு தேவையான பாதுகாப்பை வழங்கவும் போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.