'பெருசு'க்கு ஸ்கெட்ச் போட்ட 'வரிச்சியூர்'.. குண்டு தயாரித்த 'அப்பளம்'.. குப்பையில் போட்ட "கீரி"!
சென்னை: மதுரை அண்ணா நகரில் குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட 11 வெடிகுண்டுகளும், நாட்டு வெடிகுண்டுகள் இல்லை என்றும் இது சாதாரண வெங்காய வெடி போலத்தான் என்றும் இதை எறிந்தால்தான் வெடிக்கும் என்றும் மதுரை போலீஸார் கூறுகிறார்கள்.
இந்த வெடிகுண்டுகளை இங்கு போட்டவர்களின் உண்மையான நோக்கம் என்ன என்பதும் தெரியவில்லை. அதேசமயம், இதைப் போட்டவர் பிரபல ரவுடி அப்பள ராஜாவின் கூட்டாளியான மதுரை இஸ்மாயில்புரத்தைச் சேர்ந்த மணிமாறன் என்பது தெரிய வந்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
அதேசமயம், தற்போது மணிமாறன் தலைமறைவாகி விட்டார். அதேபோல இந்த வெடிகுண்டுகளின் பின்னணியில் இன்னொரு மதுரை தாதாவான வரிச்சியூர் செல்வம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவரும் தற்போது தலைமறைவாகி விட்டார்.

கீரி மணி
மணிமாறனுக்கு கீரி மணி என்ற பெயரும் உண்டு. இவர் அப்பள ராஜாவின் கூட்டாளி ஆவார். இஸ்மாயில்புரம் பகுதியில் வசித்து வருபவர்.

குப்பையில் போட்டது கீரிதான்
இந்த கீரி மணிதான் குப்பைத் தொட்டியில் குண்டுகளைப் போட்டுள்ளார் என்று போலீஸ் தரப்பு கூறுகிறது.

வரிச்சியூர் செல்வம் சொல்லித்தான்
சமீபத்தில் பிரவீன் என்பவரை சென்னை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, வரிச்சியூர் செல்வம் தன்னிடம் சில நாட்டு வெடிகுண்டுகள் தேவை என்று ஆர்டர் கொடுத்திருந்ததாகவும், தான் தயாரித்துக் கொடுத்ததாகவும், அதை மணிமாறன் மூலம் மதுரைக்கு அனுப்பியதாகவும் கூறியிருந்தார்.

கீரிக்கு வந்த கிலி
பிரவீன் போலீஸில் சிக்கியதும், தன்னை மாட்டி விட்டதையும் அறிந்த கீரி மணி பீதியடைந்தார். இந்த நிலையில்தான் குப்பைத் தொட்டியில் அவர் வெடிகுண்டுகளைப் போட்டு விட்டார்.

செல்வம்- கீரி மணி எஸ்கேப்
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தற்போது செல்வமும் காணவில்லை.கீரியையும் காணவில்லை. இருவரும் தலைமறைவாகி விட்டனர்.

"பெருசை"ப் போடத் திட்டமா?
இதற்கிடையே, இன்னொரு பிளாஷ்பேக்கும் இங்கு விரிகிறது.. பெத்தானியாபுரத்தைச் சேர்ந்தவர் பெருசு எனப்படும் அழகர். இவருக்கும் செல்வத்திற்கும் ஆகாது. கோவில் விழா ஒன்று தொடர்பாக இருவருக்கும் இடையே சமீபத்தில் மோதல் வெடித்தது. எனவே அழகரைத் தீர்த்துக் கட்ட செல்வம் திட்டமிட்டிருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications