பசுபதி பாண்டியன் கொலை வழக்கு குற்றவாளிகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: உயிர் தப்பினர்
மதுரை: பசுபதிபாண்டியன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 12 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு சென்ற போது வீசப்பட்ட நாட்டு வெடிகுண்டு, கார்கள் மீது படாததால் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தேவேந்திர வேளாளர் கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் பசுபதி பாண்டியன் கடந்த 2012ஆம் ஆண்டு திண்டுக்கல் நந்தவனப்பட்டியில் உள்ள அவரது வீட்டுக்கு வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தது.
சுபாஷ் பண்ணையார் தூண்டுதல் பேரில் இந்த கொலை சம்பவம் நடந்ததாக, சுபாஷ் பண்ணையார் உட்பட 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று (திங்கள்கிழமை) சுபாஷ் பண்ணையார் மற்றும் அவரது கூட்டாளிகள் திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு வாய்தாவுக்கு வர இருந்தனர். இதில் சுபாஷ் பண்ணையார் வரவில்லை. அவரது கூட்டாளிகள் 12 பேர் மட்டும் நீதிமன்றத்திற்கு வந்தனர்.
வழக்கு விசாரணை அடுத்த மாதம் 27ஆம் தேதி ஒத்திவைப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கிற்காக 12 பேரும் மதுரை மத்திய சிறையில் இருந்து திங்கள்கிழமை காலை இரண்டு போலீஸ் வாகனத்தில் திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டனர்.
வழக்கில் ஆஜரான பின்னர் மதுரைக்கு திரும்ப அழைத்துச் சென்றனர். அப்போது திண்டுக்கல் நகரில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் உள்ள காமலாபுரம் என்ற இடத்தில் போலீஸ் வாகனம் வரும்போது, ஒரு டிப்பர் லாரி குறுக்கே வந்து நின்றது. இதனால் போலீஸ் வாகனங்கள் வேகத்தை குறைத்து மெதுவாக சென்றது.
அப்போது டிப்பர் லாரியில் இருந்த மர்ம நபர்கள், போலீஸ் வாகனத்தை நோக்கி நாட்டு வெடிகுண்டுகளையும், பெட்ரோல் குண்டுகளையும் வீசிவிட்டு, மின்னல் வேகத்தில் தப்பினர். இந்த குண்டுகள் போலீஸ் வாகனம் மீது விழவில்லை. குண்டு வீசியதில் புகை மண்டலம் ஏற்பட்டது. குண்டுகள் படாததால் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இதையடுத்து அவர்கள் மதுரை கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications