ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் சீறிப்பாய காளைகள் தயார்... மடக்கி பிடிக்க காளையர்களும் ரெடி
மதுரையில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜனவரி 14-ம் தேதி அவனியாபுரத்திலும், ஜனவரி 15 மற்றும் 16ஆம் தேதிகளில் முறையே பாலமேடு, அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது.
Recommended Video

பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் காளைகளுக்கான முன்பதிவு இன்று நடைபெறுவதால் ஏராளமானோர் வரிசையில் காத்திருக்கின்றனர்.
அவனியாபுரத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டில் பங்குபெறும் மாடுபிடிவீரர்களுக்கும் காளைகளுக்கும் நேற்று முன்பதிவு நடந்தது. இன்று காளைகளுக்கும் டோக்கன் வழங்கப்படுகிறது. அதேபோன்று 16ஆம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கவிருக்கும் வீரர்களுக்கு இன்று முன்பதிவு நடக்கிறது. நாளை காளைகளுக்கும் டோக்கன் வழங்கப்படும்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
இந்நிலையில், வரும் 16ஆம் தேதி அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் துணை முதல்வர் ஒ. பன்னீர் செல்வமும் பங்கேற்கிறார்.

உயரம் எவ்வளவு
கட்டுப்பாட்டுகளுக்கிடையே நடைபெறக்கூடிய ஜல்லிக்கட்டு போட்டியில் இந்த ஆண்டிற்கான புதிய விதிமுறைகளை மதுரை மாவட்ட ஆட்சியா் வீரராகவராவ் வெளியிட்டுள்ளார். போட்டியில் கலந்தகொள்ளும் காளைகள் குறைந்தது 4 அடி உயரம் கொண்டதாக இருக்க வேண்டும். காளைகள் 3 வயதிற்கும் குறைவாக இருக்கக் கூடாது. காளைகளின் உயரத்தைப் போன்று அவற்றின் கொம்புகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

காளைகளுக்கு சான்றிதழ்
காளைகள் உயரம் குறைவாக இருக்கும் பட்சத்தில் வாடி வாசலில் இருந்து காளைகள் வெளியில் வரும் போது அவற்றின் மீது வீரா்கள் பாய்ந்து விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு இதுபோன்று நடைபெற்றதாகவும் மாவட்ட ஆட்சியா் தொிவித்துள்ளா்.

காளைகள் பதிவு
காளைகள் அனைத்தும் சிறப்பு மருத்துவரால் கணக்கிடப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட பின்புதான் காளைகள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது. தை பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க 954 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

காளையர்கள் தயார்
இங்கு 623 மாடுபிடி வீரர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது பெயர்களை பதிவு செய்து அடையாள அட்டைகளை பெற்று கொண்டனர். பாலமேட்டில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டில் பங்கேற்க 1118 பேர் ஆர்வத்துடன் பெயர்களை பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு புகைப்படத்துடன் கூட அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

பாலமேடு
பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்க உள்ள காளைகளுக்கான முன்பதிவு பாலமேட்டிலும், அலங்காநல்லூரிலும் நடைபெறுவதால் காளையர்கள் உற்சாகத்துடன் வரிசையில் காத்திருந்து டோக்கன்களை பெற்றுச் செல்லுகின்றனர்.

காளையர்களும் தயார்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆவாரங்காட்டில் பொன்னர் சங்கர் திடலில் வரும் 16ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது. ஆவாரங்காட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 300 மாடுபிடி வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். இதுதவிர ஜல்லிக்கட்டில் பங்கேற்க 700 காளைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இங்கு வாடிவாசல் மற்றும் தடுப்புகள் அமைக்கும் பணிகளில் விழாகுழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அலங்கரிக்கப்பட்ட வாடிவாசல்
ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஊர்களில் வாடிவாசல்கள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. சீறிப்பாய காளைகள் தயாராக உள்ளன. வாடிவாசல் வழியாக புகுந்து புயலென வரும் காளைகளை அடக்க நாங்க ரெடி என்று கூறுகின்றனர் காளையர்கள். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி களைகட்டும் என்பதால் மதுரை மாவட்ட மக்கள் உற்சாகமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications