மீனாட்சி அம்மன் கோவிலில் வீரவசந்தராயர் மண்டபம் மட்டுமே பாதிப்பு - வீரராகவராவ்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் கூறியுள்ளார். வீரவசந்தராயர் மண்டபம் தவிர வேறு எந்த கட்டிடத்திற்கும் பாதிப்பு ஏற்ப
மதுரை: தீ விபத்து ஏற்பட்ட மீனாட்சி அம்மன் கோவிலில் வீரவசந்தராயர் மண்டபம் மட்டுமே இடிந்து விழுந்துள்ளது வேறு எந்த கட்டிடத்திற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று மதுரை மாவட்ட ஆட்சியர் வீர ராகவராவ் கூறியுள்ளார்.
உலகப் புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு தீவிபத்து ஏற்பட்டது.
கோவில் வளாகத்தில் அமைந்துள்ள கடைகளில் மின்கசிவு ஏற்பட்டு பரவி, வீரவசந்தராயர் மண்டபத்தில் பரவியது.
இதில் சேதமடைந்த மண்டபம் மேற்கூரை இடிந்து விழுந்தது. அங்கிருந்த கல் தூண்டுகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
மண்டபத்தில் தங்கியிருந்த புறாக்கள் செத்து மடிந்து விட்டன. இது அபசகுணம் என்று ஜோதிடர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலையில் பசுபதீஸ்வரர் கோவில் மேற்கூரை இடிந்து விட்டதாக தகவல் பரவியது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோயில் வீர வசந்தராய மண்டபத்தில் ஆய்வு செய்த செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் வீரராகவராவ், ஓய்வு பெற்ற அரசு அதிகாரி பாலசுப்ரமணியம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
தீ விபத்தில் 7000 சதுர அடி கொண்ட வீரவசந்தராயர் மண்டபம் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளது. வேறு எந்த கட்டிடத்திற்கும் மண்டபத்திற்கும் பாதிப்பும் இல்லை. தங்கத் தேருக்கு எந்த பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறினார்.
ஆயிரம்கால் மண்டபத்தில் இருந்த சிற்பங்கள், ஓவியங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பசுபதீஸ்வரர் கோவில் மேற்கூரை இடிந்து விழுந்து விட்டதாக தகவல் பரவியது அப்படி எதுவும் நடக்கவில்லை. இடிபாடுகளை அகற்றிவிட்டு கட்டிடங்களை புணரமைப்பது குறித்து குழு ஆய்வு செய்து முடிவெடுக்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கூறினார்.