தென்மாவட்ட மக்களுக்கோர் நற்செய்தி... 2015ல் மதுரை சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் ரெடியாகிடுமாம்!
மதுரை: மதுரையில் மிகப் பிரமாண்டமான ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உருவாகி வருகிறது. மருத்துவக் கல்லூரி மைதானப் பகுதியில் நான்கு ஏக்கர் பரப்பளவில் ரூ. 150 கோடி செலவில், 300 படுக்கைகள் கொண்டதாக இது உருவாக்கப்படுகிறது.
டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனை ( எய்ம்ஸ் ) போல சகல வசதிகளுடன் கூடிய பிரமாண்டமான மருத்துவமனையாக இருக்கும்.
இந்த மருத்துவமனை செயல் பாட்டிற்கு வந்துவிட்டால், இனி தென் மாவட்ட மக்களும் மதுரையைச் சுற்றியுள்ள பல மாவட்ட மக்களும் அதி உயர் மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கோ, பெங்களூருக்கோ அலையத் தேவையிருக்காது என்கிறார்கள் .
அடுத்தாண்டு நிறைவு...
இந்த மருத்துவனை கட்டும் பணிகள் 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.
ஆய்வு...
மருத்துவமனை கட்டும் பணியை மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் சந்தீப் நாயக், தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் கீதாலட்சுமி ஆகியோர் அடங்கிய குழு பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளது.
4 ஏக்கர் பரப்பளவில்...
மதுரை மருத்துவக் கல்லூரி முன்பு உள்ள நான்கு ஏக்கர் மைதானத்தில் இந்தப் புதிய மருத்துவமனை அமைக்கப்படுகிறது.
அதிநவீன வசதிகள்...
சிறுநீரகவியல், நரம்பியல், இருதய நோய்கள் பிரிவு உள்ளிட்ட அதி முக்கியத் துறைகளில் உள்ள அனைத்து அதி நவீன வசதிகளும் இங்கு கிடைக்கும் என்று டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள்.
மொத்தம் ரூ 150 கோடி செலவில்....
மொத்தம் ரூ. 150 கோடி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 90 கோடியை கட்டுமானத்திற்கு செலவிடவுள்ளனர். ரூ. 35 கோடி மருத்துவ சாதனங்கள் வாங்க செலவிடப்படும்.
நடைபாதை...
தற்போது பழைய அண்ணா பேருந்து நிலையத்தில், அரசினர் ராஜாஜி மருத்துவமனையின் துணைக் கட்டடங்கள் அமைந்துள்ளன. அந்தக் கட்டடத்தையும், புதிய மருத்துவமனையையும் இணைக்கும் வகையில் 300 அடி நீளத்திற்கு நடைபாதையும் அமைக்கப்படவுள்ளது.
நோயாளிகள் வசதிக்காக...
புதிய மருத்துவமனையின் 2வது மாடியிலிருந்து இந்த நடைபாதை, அண்ணா பேருந்து நிலைய மருத்துவமனைக் கட்டடத்திற்கு அமைக்கப்படும். இதன் வழியாக அங்கிருந்து இங்கும், இங்கிருந்து அங்குமாக நோயாளிகளை எளிதில் மாற்றிக் கொள்ள முடியும்.
புற்றுநோய் மையம்...
இதேபோ மதுரையில் அதி நவீன பிராந்திய புற்று நோய் மையமும் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் டாக்டர் கீதாலட்சுமி தெரிவித்தார்.