நர்ஸ் வேலை வாங்கித் தருவதாக மோசடி: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் தீக்குளிப்பு
மதுரை: நர்ஸ் வேலை வாங்கித் தருவதாக தன்னை ஏமாற்றியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து மதுரை கலெக்டர் அலுவலத்தில் இளம்பெண் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை வண்டியூர் அப்துல் கலாம் தெருவைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரது மனைவி பாண்டியம்மாள்தேவி (40). கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மாணிக்கம் இறந்து விட்டதால், தனது குழந்தைகளுடன் பாண்டியம்மாள் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில், இன்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்திருந்த பாண்டியம்மாள், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தான் மறைத்து எடுத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு, பாண்டியம்மாள் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக பாண்டியம்மாள் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
மருத்துவமனையில், பாண்டியம்மாளிடம் தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது :-
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நர்ஸாக பணிபுரியும் முத்துநகை, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவில் வேலை பார்க்கும் வேட்டைச் செல்வம் ஆகியோர் எனக்கு நர்ஸ் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு செலவாகும் என்றும் கூறினர்.
இதனை நம்பி நான் ரூ.9 லட்சத்தை அவர்களிடம் கொடுத்தேன். பணத்தை வாங்கிக்கொண்டு நீண்ட நாட்களாகியும் அவர்கள் வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை.
இதுதொடர்பாக அப்போது கருப்பாயூரணி போலீசில் புகார் அளித்தேன். ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் தெரிவித்த பின்புதான் போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
முத்துநகை, வேட்டைச் செல்வம் ஆகியோரை கைது செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்திலும் போராட்டம் நடத்தினேன். இந்த நிலையில் 2 பேரும் தொடர்ந்து என்னை மிரட்டி வருகிறார்கள். மேலும் என் வீட்டையும் சேதப்படுத்தினர்.
இதுதொடர்பாக போலீசாரிடம் புகார் தெரிவித்தும் எந்தவிமான நடவடிக்கைகளும் அவர்கள் மீது எடுக்கவில்லை. எனவே அவர்களை கைது செய்யக்கோரியும், எனது பணம் ரூ. 9 லட்சத்தை மீட்டுத்தர வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தீக்குளித்தேன்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications