சசிகலா குடும்பத்தை நீக்கினாலே இரு அணிகளும் உடனே இணையும் - மாஃபா பாண்டியராஜன்
சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து நீக்கினாலே இரு அணிகளும் உடனே இணையும் என்று மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
திருவள்ளூர்: சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து நீக்குவோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டால் இரு அணிகளும் உடனே இணைய வாய்ப்பு உள்ளது என்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறினார்.
இரட்டை இலையை மீட்பதற்காக அதிமுகவின் இரண்டு அணிகளும் இணைவதற்கு முடிவு செய்தன. அதற்கான பேச்சுவார்த்தை இன்று, நாளை என்று பல்வேறு காரணங்களால் இழுபறி நீடித்து வருகிறது.
சசிகலாவையும், தினகரனையும் கட்சியிலிருந்து முழுமையாக நீக்க வேண்டும். ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்பது ஓபிஎஸ் தரப்பின் கோரிக்கை. இதை நிறைவேற்றினால் மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெறும் என என ஓபிஎஸ் அணியின் நிபந்தனை விதித்துள்ளனர். இதனால் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.
இந்நிலையில் திருவள்ளூர் செங்குன்றம் பகுதியில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் க.பாண்டியராஜன் பேசுகையில், அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியில் ஒரு கோடிக்கும் மேல் உறுப்பினர்கள் உள்ளனர். பேச்சுவார்த்தை நடத்தி இரு அணிகளும் இணைய வேண்டும் என முடிவெடுத்தபோது, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் சசிகலா படத்தை அகற்றியது வரவேற்கத்தக்கது.
இரு அணிகளும் இணைய அதிகபட்சமான வாய்ப்பு இருக்கும் போது சில அமைச்சர்கள் அதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார்கள். சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து நீக்குவோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டால் 24 மணி நேரத்தில் இரு அணிகளும் இணைய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.