வேலைக்கார பெண்ணை அடித்து உதைத்த நீதிபதி மனைவி: தூத்துக்குடியில் பரபரப்பு
தூத்துக்குடி: நீதிபதியின் மனைவி தாக்கியதாக கூறி, நீதிபதியின் வீட்டில் வேலை பார்க்கும் பெண் ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் தூத்துக்குடியில் நடந்துள்ளது.
தூத்துக்குடி 2வது கேட் அருகே உள்ள ராஜமணி தெருவைச் சேர்ந்தவர் சாஹீருசைன். இவரது மனைவி பீமாஜான் (40). நீதிமன்ற கடைநிலை ஊழியர். இவரை நீதிபதி ஒருவரின் மனைவி தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான பீமாஜான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், "நான் வேலை பார்க்கும் நீதிபதி வீட்டிற்கு, சார்பு நீதிபதி நாகராஜனோட மனைவி, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ராஜலிங்கத்தோட மனைவி, கூடுதல் மாவட்ட உரிமையில் நீதிமன்ற நீதிபதி சரவணபவனோட மனைவி ஆகிய மூன்று பேரும் வந்திருந்தார்கள்.
அவர்கள் இருந்த அறை கதவை திறக்கும்போதெல்லாம் சத்தம் அதிகமாக வந்தது. எனவே கதவுக்கு சரியாக எண்ணை போட்டு பராமரிக்கவில்லை என்று என்னிடம் கடிந்து கொண்டனர். நான் பதில் பேசாமல் வெளியே போனேன். திமிரு காரணமாக ஒன்றும் பேசாமல் போவதாக அந்த பெண்கள் என்னை பற்றி பேசினர்.
நான் கோர்ட்டுக்கு சென்று கிளர்க்கிடம் நடந்த விவரங்களை தெரிவித்தேன். அவரும், நீதிபதி வரட்டும், வந்தபிறகு அவங்ககிட்ட சொல்லிக்குவோம் இப்போ பயப்படாம வீட்டுக்கு போ என்று என்னை அனுப்பி வைத்தார்.
நான் வீட்டுக்கு போனதும், இவ்வளவு நேரம் பதில் பேசாமல் எங்கே சென்றாய் என்று கூறியதுடன், கெட்ட வார்த்தையிலும் திட்டினர். ஏ.டி. நீதிபதியோட மனைவி ரோஹினி, என்னை திடீரென்று அடித்துவிட்டார். மற்றவர்களும் என்னை திட்டினாங்க. அவங்ககிட்டர்ந்து தப்பித்து வந்து இந்த மருத்துவமனையில சேர்ந்திருக்கேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தென்பாகம் போலீஸார் வழக்கு பதிவு செய்வது குறித்து ஆலோசனை செய்து வருகிறார்கள்.