நாட்டைக் காக்க இன்னுயிர் நீத்த தமிழக வீரர் சரவணனின் நினைவு தினம்
சென்னை: கார்கில் போரில் வீரமரணம் அடைந்த திருச்சியை சேர்ந்த மேஜர் சரவணின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
மே 29, 1999 ஆம் ஆண்டு நடந்த கார்கில் போரில் தமிழகத்தை சேர்ந்த மேஜர் சரவணன் வீரமரணம் அடைந்த நாளாகும்.
பீகாரின் முதல் படைப்பிரிவில் பணிபுரிந்த மேஜர் சரவணனுக்கு கார்கில் அருகே உள்ள பதாலிக் பகுதியில் தாக்குதல் நடத்த உயரதிகாரிகள் உத்தரவிட்டனர்.
எதிரிகளுடன் போர்:
தனது குழுவினருடன் மே 29 அன்று அதிகாலை 4.00 மணியளவில் ஜுபர் மலைப்பகுதியில் உள்ள எதிரிகளின் மறைவிடமான பங்கரை நோக்கி ராக்கெட் லாஞ்சரை ஏவினார் சரவணன்.
தீவிரமான சண்டை:
அதில் எதிரிகள் இருவர் மரணமடைந்தனர். எதிரிகள் அதிகம் பேர் இருந்தாலும் வீரத்துடன் அவர்களின் மறைவிடங்களை நோக்கி ஆவேச தாக்குதல் நடத்தியவாறு முன்னேறிக்கொண்டிருந்தார் தமிழரான சரவணன். எதிரிகள் சரவணின் ஆக்ரோஷத்தை பார்த்து கோபமடைந்து தங்கள் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தினர்.
காயம் அடைந்த சரவணன்:
ஆனால் அவர்களின் தாக்குதலை முறியடித்தவாறு சரவணன் முன்னேறிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென சரவணனின் அருகில் வெடிகுண்டு வெடித்ததில் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அவரது அடிவயிற்றையும் துப்பாக்கி குண்டு பதம் பார்த்தது.
குண்டு மழை:
அப்போதும் கூட ராக்கெட் லாஞ்சர் கொண்டு தொடர்ந்து எதிரிகளை மறைவிடங்களை தாக்கினார். ராக்கெட்டுகள் தீர்ந்து போன நிலையில் தன்னிடம் இருந்த துப்பாக்கி மூலம் குண்டு மழை பொழிந்து எதிரிகளை திணறடித்தார்.
வீறு கொண்டு போராட்டம்:
தன்னுடன் வந்த வீரர்கள் பலர் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் சுருண்டு விழுந்தபோதும், வீறு கொண்டு எழும் சிங்கம் போல் பாகிஸ்தானின் வலிமையான பிடிமானம் கொண்ட பகுதிக்குள் நுழைந்தார்.
சுருண்டு விழுந்தார்:
அப்போது எதிரிகளின் தீவிரமான தாக்குதலில் சரவணன் தீடீரென மடிந்து வீழ்ந்தார். எதிரிகள் எல்லாம் முடிந்தது என்று கருதி சரவணனுக்கு அருகில் வந்தனர்.
இறுதிகட்ட போராட்டம்:
அவர் இறந்திருப்பார் என்று நினைத்து எதிரிகள் இருவர் அவர் அருகே வந்தபோது, வாழ்வின் இறுதி கட்டத்தில் இருந்த நிலையிலும் கூட அவர்கள் இருவரையும் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் குருவி சுடுவது போல சுட்டுத்தள்ளினார்.
நெஞ்சார்ந்த அஞ்சலி:
தனது தாய்மண்ணை காத்துவிட்டோம் என்ற திருப்தியில் தனது இன்னுயிரை பூமித்தாயிடம் சேர்த்தார். மேஜர் சரவணனின் வீரத்தை போற்றுவதுதான் அவருக்கு நம்முடைய நெஞ்சார்ந்த நன்றிக்கடனாக இருக்கும்.