கன்னத்தில் கை வைத்த நத்தம் விவசாயிகள்.. கடும் வறட்சியால் கந்தலாகிப் போன மாம்பழச் சாகுபடி!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் கடும் வறட்சியால் மா விவசாயிகளுக்கு பலகோடி ரூபாய் இழப்பு உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாம். இதனால் விவசாயிகள் பெரும் கவலைக்குள்ளாகியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில், சேலத்திற்கு அடுத்தபடியாக அதிக அளவு மா சாகுபடி செய்யப்படுகிறது. இதில் நத்தம் மற்றும் சாணார்பட்டி பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முதல் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை சரிவர பெய்யாமல் பொய்த்துவிட்டது. இதனால் கடும் வறட்சிநிலை ஏற்பட்டு கடந்த 4 மாதங்களாக மழை ஏதும் பெய்யாமல் வெப்பநிலையே நிலவி வந்தது. இதனால் மாமரங்களுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைக்கவில்லை.
இதையொட்டி பல விவசாயிகள் ஆங்காங்கே ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து அதன் மூலம் கிடைக்கும் சிறதளவு நீரை வைத்து மாமரங்களை உயிர்காக்க வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தவிர டாங்கர் பொருத்தப்பட்ட லாரி, டிராக்டர்கள் மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கி மரங்களை காப்பாற்றி வருகின்றனர். இதில் பல இடங்களில் ஆழ் குழாய் கிணறு அமைக்கும் போது தண்ணீர் கிடைக்காமல் ஏமாற்றத்தையே கண்டனர்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மாமரங்கள் பூ பூக்கத் தொடங்கின. இதில் மார்ச் மாதத்தில் வெயிலையும் தாக்குப் பிடித்து அதையும் மீறி பிஞ்சுகள் பிடித்தன. அப்போது பூமியில் போதுமான ஈரம் இல்லாத காரணத்தினாலும் மழையில்லாத வறட்சியினாலும் மாமரங்களிலிருந்து பிஞ்சுகள் கொத்துக் கொத்தாக உதிர்ந்தன. கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த மழையினால் மரங்களுக்கு பலனில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நத்தம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பல கிராமப் பகுதிகளிலிருந்து மாங்காய் மூடை மூடையாக சேகரிக்கப்பட்டு அதை நத்தத்தில் கமிஷன் கடைகளில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவாக மா வரத்துள்ளதால் ஒரு கிலோ ரூ12 முதல் 25 வரை விற்பனையாகிறது.
இவை மூடை மூடையாக லாரி மற்றும் வேன்களில் திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, கும்பகோணம் போன்ற வெளியூர் மற்றும் கேரளா, கர்நாடகா ஆகிய வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
மேலும் நத்தம் தொகுதி மாமர அமைப்புக்குழு தலைவர் இது குறித்து கூறுகையில், நத்தம் வட்டாரத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மாந்தோப்புகள் உள்ளன. வறட்சியின் காரணமாக இந்த ஆண்டு விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் விளைச்சல் பெற்று அறுவடையாகக் கூடிய கல்லாமை ரக மாங்காய்கள் முழுவிளைச்சல் பெறாமல் வெப்பம் தாங்க முடியாமல் மரங்களிலிருந்து மாம்பிஞ்சுகள் உதிர்கின்றன. இதனால் விவசாயிகளுக்கு சுமார் பல கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இயற்கை மாற்றங்களினால் மா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.