தேர்தலுக்காக பாமகவுக்கு தாவிய மணிரத்னம் மீண்டும் காங்கிரஸுக்கு தாவல்
சென்னை: காங்கிரஸில் இருந்து பாமகவுக்கு சென்ற மணிரத்னம் மீண்டும் காங்கிரஸில் சேர்ந்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக ஞானதேசிகன் இருக்கையில் அக்கட்சியில் சேர்ந்தவர் மணிரத்னம். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த அவருக்கு டிக்கெட் கொடுக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாமகவில் இணைந்தார்.
காங்கிரஸில் இருந்து வந்த மணிரத்னத்திற்கு சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட பாமக வாய்ப்பு அளித்தது. அவரும் தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்தார். ஆனால் அவரது மனுவை 10 பேர் முன்மொழியாததால் அது மனு நிராகரிக்கப்பட்டது. அதே சமயம் மாற்று வேட்பாளரான அவரது மனைவி சுதாவின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
சிதம்பரம் தொகுதியின் காட்டுமன்னார்குடி அருகே உள்ள நாட்டார்மங்கலம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த சுதா தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த சிதம்பரம் தொகுதியை பெற பாஜக கூட்டணியில் உள்ள பாமக, தேமுதிக இடையே கடும் போட்டி நிலவியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மணிரத்னம் பாமகவில் இருந்து விலகினார். அவர் சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலையில் மீண்டும் காங்கிரஸில் இணைந்துள்ளார்.