"அதுக்கெல்லாம் நீ சரிப்பட்டு வர மாட்டாய்"... ஸ்டாலினைக் கிண்டலடித்த மனோபாலா
திருவாரூர்: திருவாரூர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய நடிகர் மனோபோலா, அதுக்கெல்லாம் நீ சரிப்பட்டு வர மாட்டாய் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினைப் பார்த்து திமுக தலைவர் கருணாநிதி கூறுவதாக நக்கல் செய்து பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் நடிகர்கள் பலர் வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்தவகையில், திருவாரூர் பேருந்து நிலையம் அருகில் அதிமுக வேட்பாளர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வத்தை ஆதரித்து இயக்குநரும், நடிகருமான மனோபாலா பேசி வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
ஏமாற்றி வருகிறார்...
94 வயதில் முதல்வர் ஆக வேண்டுமென்று ஆசைப்பட்டு, இது தான் எனக்கு கடைசித் தேர்தல் என்று கூறி வருகிறார் திமுக தலைவர் கருணாநிதி. இதேபோல ஒவ்வொரு தேர்தலிலும் கூறி மக்களை ஏமாற்றி வருகிறார்.
துணை முதல்வர்...
காமராஜரை பார்த்து உங்களுக்கு இன்னும் முதல்வர் பதவி தேவையா என்று கேள்வி கேட்ட நீங்கள், 94 வயதில் முதல்வராக வேண்டுமென்று நினைக்கிறீர்கள். நாங்கள் கேட்கிறோம், ஏன் உங்கள் வீட்டிலேயே ஒருவர் இருக்கிறார். துணை முதல்வராக இருந்த ஸ்டாலினை முதல்வராக்க வேண்டியது தானே.
புலம்பல்...
நீ அதுக்கு சரிபட்டு வரமாட்டாய் என்று ஒரு படத்தில் நடிகர் வடிவேலு புலம்புவது போல ஸ்டாலின் புலம்பிக் கொண்டிருக்கிறார். அதிமுக வேட்பாளர்களும், வாக்காளர்களும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். காரணம் வெற்றி நம் பக்கம் என்பதால் தான்.
மின்வெட்டு...
திமுக ஆட்சியில் பதினெட்டு மணிநேரம் மின்வெட்டு இருந்தது. மருத்துவர்கள் கூட அறுவை சிகிச்சை செய்ய முடியாமல் தவித்தனர். திமுக ஆட்சியில் நிலவிய மின் பற்றாக்குறையால் ஏற்பட்ட இருளை மீட்டெடுத்து மின்மிகை மாநிலமாக தமிழகத்தை மாற்றியவர் ஜெயலலிதா. மாணவர்களுக்கு காலணி முதல் கணினி வரை கொடுத்து கல்வியில் புரட்சியை ஏற்படுத்தியவர்.
அம்மா பெட்டகம்...
தவிர தாய்மார்கள் குழந்தை பெற்றால் மட்டும் போதும், அக்குழந்தை வளர அம்மா பெட்டகம் மூலம் பதினாறு பொருள்களை கொடுத்துள்ளார். ஜெயலலிதாவின் திட்டங்களால் மகிழ்ச்சியாக வாழ்ந்த மக்கள் அதே மகிழ்ச்சியில் இருக்க மீண்டும் ஜெயலலிதா முதல்வராக வேண்டும்" என இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டார்.