அதிகரிக்கும் விஐபிக்கள்... பொறியியல் கல்லூரிகளில் 90 ஆயிரம் இடங்களை சீண்ட ஆளில்லை!
நடப்பு கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகளில் சுமார் 90 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை : தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டும் சுமார் 1 லட்சம் இடங்கள் காலியாகவே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் அங்கீகாரம் பெற்று செயல்படுகின்றன.
இந்தக் கல்லூரிகளில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதன்படி தமிழகத்தில் உள்ள 518 கல்லூரிகளுக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 23ம் தேதி தொடங்கியது.
தமிழகத்தை பொறுத்தமட்டில் மருத்துவ கலந்தாய்வு நடந்து முடிந்த இரண்டு நாட்களில் பொறியியல் கலந்தாய்வு நடக்கும். ஏனெனில் மருத்துவ இடம் கிடைக்காதவர்கள், தரவரிசைப்படி தங்களுக்கான பொறியியல் கல்லூரியை தேர்ந்தெடுக்க வாய்ப்பு அளிப்பதற்காக இந்த முறையில் நடத்தப்பட்டது. ஆனால் நீட் தேர்வு குளறுபடி மற்றும் இடஒதுக்கீடு விவகாரத்தால் தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு இன்னும் சேர்க்கை நடைபெறவில்லை.
விஐபிக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்நிலையில் பொறியியல் கலந்தாய்வு நாளை மறுநாள் நிறைவு பெற உள்ளது. ஆனால் சுமார் 100க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பல இடங்கள் காலியாக உள்ளது தெரிய வந்துள்ளது. பொறியியல் படித்து விட்டு வேலையில்லாத பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இந்த படிப்பில் சேர மாணவர்களிடையே ஆர்வம் குறைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆர்வம் காட்டாத மாணவர்கள்
கடந்த சில ஆண்டுகளாகவே பொறியியல் படிப்பு மீதான மோகம் படிப்படியாக குறைந்து வருகிறது. கலந்தாய்வு தொடங்கியது முதலே மந்தமான நிலை காணப்பட்டது. கலந்தாய்வில் அழைப்பு அனுப்பியும் பல மாணவர்கள் பங்கேற்கவில்லை.
34 சதவீதம் பேர் ஆப்சென்ட்
பொதுக் கலந்தாய்விற்கு ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 270 பேர் அழைக்கப்பட்ட நிலையில் இவர்களில் சுமார் 34 சதவீதம் பேர் கலந்தாய்விற்கே வரவில்லை. அதாவது ஏறத்தாழ 40 ஆயிரத்து 634 பேர் கலந்தாய்விற்கே வரவில்லை. இதனால் ஒரு லட்சத்து 339 இடங்கள் தற்போது காலியாக உள்ளன. கலந்தாய்விற்கு வந்தவர்களில் 519 பேர் பொறியியல் கல்லூரிகளில் இடம் வேண்டாம் என்று சென்றுள்ளனர்.
அதிக காலியிடங்கள்
இந்நிலையில் இன்று முதல் 3 நாட்களில் தோராயமாக 20 ஆயிரம் இடங்கள் நிரம்பினாலும் சுமார் 80 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கும் சூழல் உருவாகியுள்ளது. அதிலும் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்துவிட்டால் மேலும் சில மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்துள்ள பொறியியல் படிப்பை விட்டுவிட்டு செல்வார்கள் என்றும் கூறப்படுவதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
நிரம்பவில்லை
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள சிறந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மட்டுமின்றி நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களும் நிரம்பி உள்ளன. தனியர் கல்லூரிகளை பொறுத்தவரையில் அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் கொண்ட தனியார் கல்லூரிகளில் மட்டுமே மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதனால் அரைகுறையாக உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகள் மாணவர்கள் சேராததால் தொடர்ந்து கல்லூரியை நடத்த முடியாத இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.