சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.. மார்க்சிஸ்ட் நடைபயணம்
8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருவண்ணாமலை முதல் சேலம் வரை நடைபயணம் அறிவித்துள்ளது.
சென்னை: 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து 'என் நிலம், என் உரிமை' என்ற பெயரில் திருவண்ணாமலையில் இருந்து சேலம் வரை நாளை புதன்கிழமை நடைபயணம் மேற்கொள்ளப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தால், ஆயிரம் ஏக்கருக்கு மேலான காடுகள், விளைநிலங்கள் அழிக்கப்படும் என்பதால் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர், விவசாயிகள், பொதுமக்கள் போராடி வருகின்றனர். மேலும், 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களை போலீஸார் கைது செய்து வருகின்றனர்.
பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் எதிர்ப்புகளைத் தாண்டி 8 வழிச்சாலைதிட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தமிழக அரசு தீவிரமாக உள்ளது. சாலை அமைப்பதற்கு நிலங்கள் கையகப்படுத்தும் பணிகளும் வேகமாக நடந்துவருகிறது.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 8 வழிசாலை திட்டத்தை எதிர்த்து நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை - சேலம் எட்டு வழிச்சாலையால் 4500 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்படும். அத்துடன் சுமார் 1000 ஏக்கரில் காடுகள் அழிக்கப்படுவதோடு 159 கிராமங்கள் பாதிக்கப்படும்.
6000 விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் எட்டுவழிச்சாலை திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எந்த வகையிலும் பயனளிக்காத எட்டுவழிச்சாலை திட்டம் தேவையில்லை என வலியுறுத்தி நாளை புதன்கிழமை திருவண்ணாமலையில் நடைபயணம் தொடங்கப்பட்டு சேலம் வரை சென்றடையும்.
இந்த போராட்டத்தில் அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் பங்கேற்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.