புஷ்கரம்: விழாக் கோலத்தில் மயிலாடுதுறை.. துலாக்கட்ட குளம் முழுவதும் நீர்.. பக்தர்கள் மகிழ்ச்சி!
மயிலாடுதுறையில் நாளை தொடங்க உள்ள காவேரி மஹா புஷ்கரத்தையொட்டி துலாக்கட்ட குளத்தில் தண்ணீர் நிரம்பியிருக்கும் காட்சி பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் குளத்தில் துலாக்கட்டத்தை முன்னிட்டு காவிரி நீர் நிரப்பப்பட்டுள்ளது, பக்தர்கள் மற்றும் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மயூரநாதர் ஆலயம் என்றும் மாயுரம் என்றும் சிறப்பு பெற்று தற்போது மயிலாடுதுறை என்று அனைவராலும் அறியப்படும் இந்த ஊர் 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் காவேரி மஹா புஷ்கர விழாவால் களைகட்டியுள்ளது. காவிரி கரைபுரண்டோடும் இந்த கோவிலின் துலாக்கட்டம் கடந்த சில ஆண்டுகளாகவே வறண்டே காணப்பட்டது. இந்நிலையில் விழாக்குழுவினரின் ஏற்பாட்டால் துலாக்கட்ட குளம் நீர் நிரம்பி காணப்படுகிறது.
மயிலாடுதுறையில் அமைந்துள்ள துலாக்கட்டம், ஒரு புண்ணிய தீர்த்தமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் இங்கு நடைபெறும் காவிரி தீர்த்தவாரி நிகழ்ச்சி மிகவும் புகழ் பெற்றதாகும்.கங்கையில் தினமும் நீராடினால் என்ன புண்ணியம் கிடைக்குமோ, அந்த புண்ணியம் மயிலாடுதுறை துலாகட்ட காவிரி ஆற்றில் புனித நீராடினால் கிடைத்துவிடும் என்பது ஐதீகம்.
தீர்த்த குரு
காவிரி பகுதியில் மேற்கு நோக்கிய திசையில், இரண்டு இடங்களில் மட்டுமே நந்தி சிலை அமைந்துள்ளது. அவற்றுள், கர்நாடகாவிற்கு பிறகு இங்குதான் காவிரியின் நடுவே, தனி சன்னதியில் நந்தி சிலை அமைந்துள்ளது. புஷ்கரம் என்பது நதிகளுக்கு உரிய விழா. புஷ்கரம் என்றால் தீர்த்த குரு, ஆதி குரு என்று பொருள்படும்.
காவேரி தாய்க்கு பிரதிஷ்டை
12.09.2017 முதல் 24.09.2017 வரை குரு பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பிரவேசிப்பதால் இந்த விழா இங்கு கொண்டாடப்படுகிறது. இவ்விழா சிறப்பாக அமைய துலாக்கட்டத்தில் பக்தர்கள் புனித நீராடுவதற்காக உள்கட்ட அமைப்புக்கள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. மேலும் காவேரி தாய்க்கு இன்று விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
மகிழ்ச்சி
துலாக்கட்டக் குளத்தில் நீர் நிரம்பி காணப்படுவது மக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே வெளி மாவட்டங்களில் அதிக அளவில் மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் மயிலாடுதுறை நகராட்சி காவேரி புஷ்கரம் நிகழ்ச்சிக்காக நகர் முழுவதும் தூய்மைப் பணிகளை சிறப்பாக செய்து வருகின்றது. மயிலாடுதுறை - திருக்கடையூர்-காரைக்கால் சாலைகளும் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
நம்பிக்கை
புஷ்கர புண்ணிய காலத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா, தேவர்கள், ரிஷிகள் போன்றோர் நதிகளில் வாசம் செய்வதால், இந்த புண்ணிய காலங்களில் நதியில் நீராடுவதால் மூன்றரை கோடி தீர்த்தத்தில் புனித நீராடிய பலன் கிடைக்கும். அன்னதானம், வஸ்திரதானம் போன்ற பல தானங்கள் செய்தால் பன்மடங்கு பலனை தந்து நம்மை மோட்சத்திற்கு போக வழி வகுக்கும். புஷ்கர புண்ணிய காலத்தில் நீராடி பிதுர்களுக்கு தர்ப்பணம் முதலிய சடங்குகள் செய்வதால் பிதுர்சாபம் நீங்கி நல்வாழ்க்கை வாழ வழி வகுக்கும் என்று நம்பப்படுகிறது.