சசி அண்ட் கோ-வின் ஓரங்க நாடகம் முடிவு! ஓபிஎஸ், எடப்பாடி கோஷ்டிகள் இணைப்பு முயற்சி டமால்!
அதிமுகவின் ஓபிஎஸ், எடப்பாடி கோஷ்டிகள் இணைப்பு முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டன.
சென்னை: தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பிய அதிமுகவின் ஓபிஎஸ், எடப்பாடி கோஷ்டிகள் இணைப்பு முயற்சிகள் தற்போது முறிந்து போய்விட்டது.
அதிமுகவின் ஓபிஎஸ் கோஷ்டியுடன் இணைந்து செயல்படப் போவதாக தடாலடியாக அறிவித்து எடப்பாடி கோஷ்டி. இதற்காக டிடிவி தினகரன் சார்ந்த குடும்பத்தையே ஒதுக்கி வைக்கிறோம் என்றும் கூட அறிவித்தது.
தினகரனும் தாம் அதிமுகவை விட்டு ஒதுங்குவதாக அறிவித்தார். அதேநேரத்தில் துணைப் பொதுச்செயலர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. இதனால் எடப்பாடி கோஷ்டியின் இந்த அறிவிப்பை யாரும் நம்ப தயாராக இல்லை.
திவாகரன் டிராமா
மேலும் தினகரனை ஓரம்கட்டி ஒதுக்கி வைப்பதற்காக சசிகலா குடும்பத்தினர் திவாகரன் மூலமாக நடத்தி வரும் நாடகம்தான் இது என்பதும் அம்பலமாகி இருந்தது. இதனிடையே முதல்வர் பதவியை விட்டுத் தரமாட்டோம்; அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் வெற்றிக்கே தாமே காரணம் என்பார் ஓபிஎஸ் என எடப்பாடி தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்தன.
ஓபிஎஸ்க்கு எதிர்ப்பு
அதேபோல் ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்கான விசாரணை கோரிக்கையை கைவிடுகிறாரா ஓபிஎஸ்? என்கிற கோபக் குரல்களும் எழுந்தன. அத்துடன் எடப்பாடி கோஷ்டி என்பதே சசிகலாவால் உருவாக்கப்பட்டதுதானே.. அந்த அணியுடன் ஓபிஎஸ் சேருவதை ஏற்க முடியாது எனவும் அதிமுக தொண்டர்கள் குமுறலை வெளிப்படுத்தினர்.
கறார் நிபந்தனைகள்
இந்நிலையில்தான் ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்கு சிபிஐ விசாரணை கோரி எடப்பாடி அரசு, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்ப வேண்டும்; ஒட்டுமொத்தமாக சசிகலா குடும்பத்தையே அதிமுகவை விட்டு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை கறாராக முன்வைத்திருக்கிறது ஓபிஎஸ் கோஷ்டி. அத்துடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவும் ஓபிஎஸ்-க்கே இருக்கிறது; முதல்வர் பதவியை தருவதற்கு எடப்பாடி கோஷ்டி யார் என ஓபிஎஸ் அணியின் கேபி முனுசாமி கொந்தளித்தார்.
தொண்டர்கள் எதிர்ப்பு
மேலும் எடப்பாடி கோஷ்டியுடன் இணைவதற்கு அதிமுக தொண்டர்களே கடுமையாக எதிர்க்கின்றனர் எனவும் கேபிமுனுசாமி தெரிவித்தார். ஓபிஎஸ் கோஷ்டியின் கோரிக்கைகளை எடப்பாடி கோஷ்டி நிச்சயம் முழுமையாக ஏற்காது என்றே தெரிகிறது.
இணைப்பு முயற்சி முறிவு
தினகரனை அதிமுகவில் இருந்து ஒதுக்கி வைக்கும் நாடகத்தின் ஒரு அங்கமாகவே இணைப்பு பேச்சுவார்த்தை எனும் 'நூல்' விட்டுப் பார்த்திருக்கிறது சசிகலா அண்ட் கோ. ஆனால் இந்த நாடகத்தை புரிந்து கொண்ட ஓபிஎஸ் கோஷ்டி இப்போது பின்வாங்க தொடங்க இருக்கிறது. ஒட்டுமொத்த இணைப்பு முயற்சி முறிந்து போனதாகிவிட்டது.