மேட்டூர் அணைக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை.. கடும் பஞ்சத்தில் காவிரி டெல்டா மக்கள்!
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து முற்றுலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கடும் குடிநீர் பஞ்சத்தில் காவிரி டெல்டா மாவட்ட மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து முற்றிலும் நின்றுவிட்டதால் காவிரி டெல்டா பகுதியில் வசிக்கும் மக்கள் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
தமிழக விவசாயத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து வரும் நீர்தான் அடிப்படை ஆதாரம். காவிரியில் இருந்து நீர் வரத்து நிறுத்தப்பட்டதாலும், சுட்டெரிக்கும் வெயிலாலும் மேட்டூர் அணையின் நீர் மட்டம் வரலாறு காணாத வகையில் குறைந்துள்ளது.
பருவமழை பொய்த்துப் போனதால் இந்த ஆண்டு விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் 250க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகின. இந்நிலையில், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டு வருகிறது.
தடுப்பு
காவிரியில் இருந்து மேட்டூர் அணைக்கு வரக்கூடிய சொற்ப அளவிலான தண்ணீரும், கர்நாடகா அரசு மாதேஸ்வரன் மலைக்கோவிலுக்காக தடுப்பு ஏற்படுத்தி தண்ணீரை எடுத்துக் கொள்கிறது. இதனால் காவிரி முற்றிலும் காய்ந்த நிலையில் உள்ளது.
மணல் திட்டு
மேலும், தற்போது கோடை வெயில் சுட்டெரிப்பதால் காவிரி பரப்பில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் தண்ணீரும் வறண்டு போய்விட்டது. இதனால் வெறும் மணல் திட்டாக காவிரி காட்சியளிக்கிறது.
குடிநீர் பஞ்சம்
காவிரியில் தண்ணீர் வராததால் ஆற்று மணலில் ஊற்று தோன்றி தேவையான குடிநீரை மக்கள் எடுத்துச் செல்கின்றனர். இனி வரும் காலங்களில் இந்த நீரும் வற்றிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று காவிரி டெல்டா பகுதியில் உள்ள மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கோரிக்கை
குறுவை, சம்பா சாகுபடி முற்றிலும் இல்லாமல் போய்விட்டது. நஷ்ட ஈடு கேட்டு விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், குடிநீரையாவது பொதுமக்களுக்கு அரசு வழங்க வேண்டியது அவசியம். எனவே, கர்நாடக அரசிடம் இருந்து காவிரி நீரை கேட்டு தமிழக அரசு பெற வேண்டும் என்று பொதுமக்கள் கோரியுள்ளனர்.