ஜெ.வை திமுகவில் சேர்க்க வலியுறுத்திய எம்ஜிஆர்.. கழகத்தின் கதை புத்தகத்தில் டாக்டர் ராமதாஸ்
ஜெயலலிதாவை திமுக சேர்க்க வேண்டும் என்று எம்ஜிஆர் வலியுறுத்தியதை கருணாநிதி நிராகரித்தார் என கழகத்தின் கதை புத்தகத்தில் டாக்டர் ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவை திமுகவில் சேர்க்க எம்ஜிஆர் வலியுறுத்தியதாகவும் ஆனால் கருணாநிதி திட்டவட்டமாக மறுத்துவிட்டார் எனவும் கழகத்தின் கதை- அதிமுக தொடக்கம் முதல் இன்று வரை புத்தகத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பதிவு செய்துள்ளார்.
கழகத்தின் கதை- அதிமுக தொடக்கம் முதல் இன்று வரை என்ற தலைப்பில் அதிமுகவின் வரலாற்றை விவரிக்கும் 287 பக்க நூலை டாக்டர் ராமதாஸ் எழுதி வெளியிட்டுள்ளார். புதிய அரசியல் பதிப்பகத்தின் வெளியீடாக இந்த புத்தகம் வெளிவந்துள்ளது.
64 அத்தியாயங்களில் எம்ஜிஆர்- கருணாநிதி நட்பில் தொடங்கி அதிமுகவின் தற்போதைய நிலைவரை இப்புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்புத்தகத்தின் 17-வது பக்கத்தில் டாக்டர் ராமதாஸ் எழுதியுள்ளதாவது:
ஜெ.வின் அரசியல் பிரவேசம்
திரைத்துறையில் இருந்து அரசியல் வரை செல்வாக்கு பெற்றிருந்த எம்ஜிஆர் தம்மைப் போலவே ஜெயலலிதாவையும் அரசியலுக்கு கொண்டுவர வேண்டும் என நினைத்தார். தம்மை அரசியலுக்கு கொண்டு வரும்படி ஜெயலலிதாதான் எம்ஜிஆரை கட்டாயப்படுத்தினார் என்றும் கூறப்பட்டது.
மதுரை மாநாடு
இத்தைகைய சூழலில்தான் 05.08.1972 அன்று மதுரை முத்து ஏற்பாட்டில் மதுரையில் மாவட்ட மாநாடு நடத்தப்பட்டது. அந்த மாநாட்டிற்கு எம்ஜிஆரும் அழைக்கப்பட்டிருந்தார்.
திமுகவில் ஜெ.வை சேர்க்க முயற்சி
அம்மாநாட்டில் ஜெயலலிதாவின் கலைநிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும்; அந்த மாநாட்டில் ஜெயலலிதாவை திமுகவில் சேர்க்க வேண்டும் என்று கலைஞரைக் கேட்டுக் கொண்டார்.
திராவிட இயக்கம் தாங்காது
ஆனால் கலைஞரோ, ஏ அப்பா! திராவிட இயக்கம் இதையெல்லாம் தாங்காது. கொஞ்சம் பொறுமையாக இருந்து சிந்தியுங்கள் என்று பதில் சொல்லிவிட்டார். மாநாட்டு வரவேற்பு குழுவின் தலைவரான மதுரை முத்தும் இதற்கு சம்மதிக்கவில்லை.
முக முத்து தலைமையில் ஊர்வலம்
அதுமட்டுமின்றி ஒவ்வொரு திமுக மாநாட்டிலும் எம்ஜிஆர் தலைமையில்தான் ஊர்வலம் நடக்கும். ஆனால் மதுரை மாநாட்டு ஊர்வலத்துக்கு மு.க. முத்து தலைமை தாங்கினார். இதனால் எம்.ஜி.ஆருக்கு கடும் அதிருப்தி.
ஜெ.வுடன் எம்ஜிஆர் நகர் வலம்
மாநாட்டுக்கு வந்திருந்தோரின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க வேண்டும் என்று நினைத்த எம்ஜிஆர் தன்னுடன் ஜெயலலிதாவை அழைத்துக் கோண்டு திறந்த வாகனத்தில் மதுரை மாநகரை வலம் வரத் தொடங்கினார். இதையறிந்த தொண்டர்கள் அனைவரும் மாநாட்டுத் திடலில் இருந்து எம்ஜிஆர் ஊர்வலம் செல்லும் சாலைகளில் குவியத் தொடங்கினார்கள்.
வெளியேற்ற முடிவு
இதையறிந்து கலைஞரின் உள்ளம் கொதித்தது. மாநாட்டில் கலைஞரை ஆதரித்து எம்ஜிஆர் பேசினாலும் புகைச்சல் அதிகரித்தது. கிட்டத்தட்ட எம்.ஜி.ஆரை. வெளியேற்றும் மனநிலைக்கு கலைஞர் வந்துவிட்டார்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.