அதெல்லாம் தினகரனுக்கு முழு உரிமை உண்டு... திண்டுக்கல் சீனிவாசன்
கட்சிப் பணியாற்ற டிடிவி தினகரனுக்கு முழு உரிமை உண்டு என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுகவின் கட்சிப் பணிகளில் இணைந்து பணியாற்ற டிடிவி தினகரனுக்கு முழு உரிமை உண்டு என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னத்தை மீட்க அதிமுகவின் இரு அணிகளும் ஒன்று சேர வேண்டும் என்று விரும்பி அதற்கான நடவடிக்கைகளில் இரு தரப்பை சேர்ந்த நிர்வாகிகளும் ஈடுபட்டனர்.
அப்போது தினகரனையும், சசிகலாவையும் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று ஓபிஎஸ் அணியினர் நிர்பந்தித்தனர்.

ராவோடு ராவாக
இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரனின் பெயர் அடிப்பட்ட போது அமைச்சர் தங்கமணி வீட்டில் இரவோடு இரவாக அமைச்சர்கள் சிவி சண்முகம், ஜெயகுமார், வேலுமணி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.

கூட்டுப் பேட்டி
இதைத் தொடர்ந்து கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தினகரனையும், சசிகலாவையும் கட்சியிலிருந்து ஒதுக்கி வைப்பதாக அமைச்சர் ஜெயகுமார் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

31 நாள் உள்ளே
இதைத் தொடர்ந்து இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு 31 நாள்களுக்கு பிறகு அவருக்கு ஜாமீன் கிடைத்தது. இந்நிலையில் டெல்லி விமான நிலையத்தில் அவர் கூறுகையில், கட்சியில் தொடர்ந்து நீடிப்பேன். என்னை நீக்கும் உரிமை பொதுச் செயலாளருக்கே உண்டு என்று தெரிவித்துள்ளார்.

இப்போது வெளியே
இதற்கு பதிலடியாக அமைச்சர் செங்கோட்டையனோ, தினகரன் கட்சியில் நீடிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே முடிவு செய்வார் என்று தெரிவித்திருந்தார்.

ஆதரவு குரல் கொடுக்கும் திண்டுக்கல்
தற்போது திண்டுக்கல்லில் அமைச்சர் சீனிவாசன் அளித்த பேட்டியில், கட்சிப் பணியாற்ற தினகரனுக்கு முழு உரிமை உண்டு. தினகரனை ஒதுக்கி வைத்ததாக கூறியது அமைச்சர் ஜெயகுமாரின் சொந்த கருத்து என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications