தாசில்தார் அலுவலகம் கட்ட எதிர்ப்பு...அமைச்சர் கோகுல இந்திரா அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்...
சென்னை: கீழ்ப்பாக்கத்தில் தாசில்தார் அலுவலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் கோகுல இந்திரா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை டிபி சத்திரம் புஜ்ஜி தெரு மற்றும் பள்ளி தெரு இடையே விளையாட்டு மைதானம் உள்ளது. புதிதாக தாசில்தார் அலுவலகம் கட்டுவதற்காக இந்த மைதானத்தை அதிகாரிகள் தேர்வு செய்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், தாசில்தார் அலுவலகம் கட்டுவதற்கு வேறு இடத்தை தேர்வு செய்யுமாறு கூறினர். ஆனாலும், கடந்த 2 நாட்களுக்கு முன், புதிய கட்டிடத்துக்கான பூமி பூஜை போடப்பட்டது.
இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 50 க்கு மேற்பட்டோர் நேற்று மாலை அமைச்சர் கோகுல இந்திரா அலுவகலத்தை முற்றுகையிட்டு, கோஷமிட்டனர். ஆனால், அங்கு அமைச்சர் இல்லை.
இதுபற்றி அறிந்ததும், 8 வது மண்டல குழு தலைவர் அதிமுகவை சேர்ந்த வெங்கடேசன், முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்படதையடுத்து பொதுமக்கள் அனவைரும் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications