காவிரி நீர் பங்கீடு தீர்ப்பை படித்துவிட்டு தான் அரசு கருத்து சொல்லும்... ஜெயக்குமார் மழுப்பல்!
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை முழுவதும் படித்துப் பார்த்த பிறகே அரசு சார்பில் கருத்து தெரிவிக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : காவிரி நீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை முழுவதும் படித்துப் பார்த்த பிறகே அரசு சார்பில் கருத்து தெரிவிக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். எனினும் காவிரி மேலாண்மை வாரியம், கண்காணிப்புக் குழு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தியை வரவேற்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னையில் முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திய பின்னர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது : காவிரி வழக்கில் கிட்டதட்ட 400 பக்கங்கள் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தத் தீர்ப்பை முழுவதும் படித்துப் பார்த்துவிட்டுத் தான் அதிமுக அரசு முழு கருத்தை சொல்லமுடியும். ஊடகங்கள் வாயிலாக அறிந்த செய்தியின் படி காவிரி மேலாண்மை வாரியமும், கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டதும் ஒரு நல்ல விஷயம், வரவேற்கத்தக்கது.
205 டிஎம்சி நீர் நம்முடைய ஜீவாதார உரிமை, 1991 முதல் 96 வரையில் இந்த நீரை பெறுவதற்காக ஜெயலலிதா 72 மணி நேரம் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த மாபெரும் முதல்வர். அன்று ஜெயலலிதா வைத்த கோரிக்கைகள் 3, எந்த வகையிலும் 205 டிஎம்சி நீரை குறைக்கக் கூடாது.
தீர்ப்பு நகல் கிடைத்ததும்
205 டிஎம்சி நீரை தமிழ்நாடு டெல்டா மாவட்ட விவசாயிகள் பெற வசதியாக காவிரி மேலாண்மை வாரியம், கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இன்று அது அமைக்கப்பட்டிருப்பது ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். தீர்ப்பு நகல் இன்னும் கிடைக்கவில்லை, கிடைத்ததும் அது குறித்து கருத்து சொல்வோம்.
வருத்தமளிக்கும் விஷயம்
ஆனால் வருத்தமளிக்கும் விஷயம் நமக்கு 14.75 டிஎம்சி நீர் குறைந்திருக்கிறது. இதுவும் முழுவதும் தீர்ப்பை பார்க்கவில்லை, அதிகாரப்பூர்வமாக இன்னும் அரசுக்கு தெரியவில்லை.
யாருக்கும் உரிமையில்லை
காவிரியை பொறுத்த வரை ஜெயலலிதாவும், ஜெ. வழியில் அரசை சிறப்பாக செயல்படுத்தி வரும் முதல்வர் பழனிசாமியும் அழுத்தமான வாதங்களை உச்சநீதிமன்றத்தில் முன் வைத்திருக்கிறார்கள். காவிரி தங்களுக்குத் தான் உரிமை என்று சொன்ன கர்நாடகாவிற்கு காவிரியில் யாரும் உரிமை கொண்டாடக் கூடாது என்று உச்சநீதிமன்றம் சொல்லி இருப்பதும் வரவேற்கத்தக்க விஷயம்.
சரியான முறையிலேயே வாதம்
காவிரி நீர் விவகாரத்தில் வாதங்களை எந்த அளவிற்கு அழுத்தமாக முன் எடுத்து வைத்திருக்கிறோம் என்பது விவசாயிகள், மக்களுக்கு தெரியும். அதற்கு மாறாக திமுக அரசு மீது விமர்சனம் வைப்பது என்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விஷயம் என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.