சிலை கடத்தல் வழக்கு தனி நபரின் விளம்பரத்துக்காக நடைபெறக்கூடாது.. பொன் மாணிக்கவேலை சாடிய அமைச்சர்!
சிலை கடத்தல் வழக்கு ஒரு தனி நபரின் விளம்பரத்துக்காக நடைபெறக்கூடாது என அமைச்சர் ஆர்பி உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: சிலை கடத்தல் வழக்கு ஒரு தனி நபரின் விளம்பரத்துக்காக நடைபெறக்கூடாது என அமைச்சர் ஆர்பி உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
சிலைக்கடத்தல் வழக்கு தொடர்பாக ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரித்து வந்தனர்.
ஐஜி பொன்மாணிக்கவேலின் தலைமையில் சிலை தடுப்பு பிரிவு வந்தபிறகு சிலைக்கடத்தல் வழக்குகள் விறுவிறுப்படைந்தன.
சிலை கடத்தல்
வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் கடத்தி வைக்கப்பட்டிருந்த சிலைகள் தாயகம் திரும்பின. ஐஜி பொன் மாணிக்கவேலின் பணியை பலரும் பாராட்டி வந்தனர்.
பொன் மாணிக்கவேல் குற்றச்சாட்டு
இந்நிலையில் சிலை கடத்தல் தொடர்பான வழக்கில் தமிழக அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என ஐஜி பொன் மாணிக்கவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றம்சாட்டினார்.
கடும் வாக்குவாதம்
இதனால் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருக்கும் ஐஜி பொன் மாணிக்கவேலுக்கும் நீதிமன்றத்திலே கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
சிபிஐக்கு மாற்றுங்கள்
இந்நிலையில் சிலை கடத்தல் தொடர்பான வழக்கில் ஐஜி பொன் மாணிக்கவேலின் விசாரணை திருப்தியளிக்கவில்லை என்றும் சிலை கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.
அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்
இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜிஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழுவே விசாரிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினருடம் வலியுறுத்தி வருகின்றனர்.
அமைச்சர் விளக்கம்
இந்நிலையில் அமைச்சர் ஆர்பி உதயக்குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
தனி நபர் விளம்பரம்
அதற்கு பதிலளித்த அமைச்சர் ஆர்பி உதயக்குமார் சிலை கடத்தல் வழக்கு ஒரு தனி நபரின் விளம்பரத்திற்காக நடைபெறக்கூடாது; வழக்கு விசாரணை வெளிப்படையாக நடைபெறவேண்டும் என்பதற்காகவே சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது என்றார்.
வீட்டில் பிரசவம் பார்க்கக் கூடாது
மேலும் கிராமங்கள் தோறும் மருத்துவமனை உள்ளது; விளம்பரத்தை மக்கள் நம்பி வீட்டில் பிரசவம் பார்க்கக் கூடாது என்றும் அமைச்சர் ஆர்பி உதயக்குமார் கூறினார்.