மக்களின் நாடித் துடிப்பை பார்த்து வாங்க.. நாடி ஜோசியத்தை நம்பி வராதீர்.. ரஜினிக்கு அமைச்சர் அட்வைஸ்!
சிவகாசி: ரஜினி போன்றோர் மக்களின் நாடித் துடிப்பை பார்த்து அரசியலுக்கு வர வேண்டும். அதை விடுத்து நாடி ஜோசியத்தை நம்பி அரசியலுக்கு வரக் கூடாது என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
மன்னார்குடியில் காவிரியை மீட்டெடுத்த அரசுக்கு பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது ஜெயலலிதா இறந்தவுடன் தன்னை முதல்வராக வேண்டும் என முதலில் கேட்டது திவாகரன்தான்.
ஆனால் நான் முதல்வரானால் சசிகலா குடும்பம் என்ன செய்யும் என்பது எனக்கு தெரியும். அதனால் நான் மறுத்துவிட்டேன். எனினும் அவர் மீண்டும் மீண்டும் வற்புறுத்தினார்.
சதி திட்டம்
இதனால் அரசியல் நிலையை சமாளிக்க நான் முதல்வராக சம்மதித்தேன். இதையடுத்து திவாகரன் ஊரில் இல்லாத போது என்னை மிரட்டி தினகரன்தான் கையெழுத்து வாங்கினார். மேலும் சசிகலா சிறைக்கு சென்றவுடன் தான் முதல்வராக வேண்டும் என சதி திட்டம் தீட்டினார் என்று ஓபிஎஸ் குற்றம்சாட்டியிருந்தார்.
தினகரன் பதிலடி
இதற்கு தஞ்சையில் பதிலடி கொடுத்த தினகரன் உண்மையும் ஆதாரமும் இல்லாமல் தன்னை பற்றி ஓபிஎஸ் இப்படி பேசியது ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவே தவிர அதில் உண்மையேதும் இல்லை. மேலும் தன்னால் மீண்டும் முதல்வராக முடியாது என்ற விரக்தியில் பேசியதாகவும் தினகரன் குற்றம்சாட்டினார்.
சட்ட ரீதியில்
இதுகுறித்து விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அமைச்சர் உதயகுமார் கூறுகையில் உண்மையும் ஆதாரமும் இல்லாமல் துணை முதல்வர் ஓபிஎஸ் எதையும் பேச மாட்டார். அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டை சட்ட ரீதியில் அவர் எதிர்கொள்வார்.
நாடி ஜோசியம்
ஊழல் புகாரில் சிக்கியவர்கள் பதவி விலக வேண்டும் என கூறுபவர்கள் முன்னுதாரணமாக இருந்துள்ளார்களா. ரஜினி உள்ளிட்டோர் மக்களின் நாடித்துடிப்பை அறிந்து அரசியலுக்கு வர வேண்டும். நாடி ஜோசியத்தை நம்பி பார்க்கக் கூடாது.
முன்னிலை
திமுகவும் அமமுகவும்தான் அதிமுகவுக்கு எதிரிகள். தினகரன் தன்னை முன்னிலைப்படுத்துகிறாரே தவிர மக்கள் சார்ந்த நலன் அவரிடம் இல்லை என்றார் உதயகுமார்.