'மடியில் கனமில்லை.. வழியில் பயமில்லை' குட்கா விவகாரத்தை சட்டரீதியாக சந்திப்பேன் - விஜயபாஸ்கர்
சென்னை: தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா போதைப் பொருள் குறித்து எழுந்துள்ள பிரச்சினையை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருளை அனுமதிக்க அதன் விற்பனையாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக தகவல் வெளியானது.
இந்த விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். சட்டசபை கூட்டத்தொடரின் போது இதுகுறித்து பேச திமுகவினர் அனுமதி கோரினர். ஆனால் அதற்கு சபாநாயகர் அனுமதிக்காததால் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்றும் வெளிநடப்பு செய்தனர்.
இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், குட்கா மற்றும் போதை பொருட்கள் குறித்து உண்மைக்கு மாறான கருத்துக்கள் எனக்கு எதிராக பரப்பப்படுகின்றன. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திட்டமிட்டு தொடர்ந்து எனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் பரப்புகிறார்கள்.
எனக்கு மடியில் கனமில்லை எனவே, வழியில் பயமில்லை. இந்த பிரச்சினையை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திட்டமிட்டு என் மீது அவதூறு பரப்புகிறார்கள்.
குட்காவை தடை செய்யும் உத்தரவு 2013 தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது. குட்கா விவகாரத்தில் எனக்கு எதிராக பல தவறான கருத்துகள் பரபரப்படுகின்றன. குட்கா விவகாரத்தில் குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வேன் என்றார்.