அந்த கூவத்தூர் 20 எம்எல்ஏக்கள் என்னைவிட்டு போகமாட்டாங்க- எடப்பாடியை மிரட்டும் 'வில்லங்க' விஜயபாஸ்கர்
அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினால் 20 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் எடப்பாடி அரசை கவிழ்ப்பேன் என மிரட்டியுள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
சென்னை: தம்மை அமைச்சரவையில் இருந்து நீக்கினால் எடப்பாடி அரசை 20 எம்.எல்.ஏக்களை வைத்து கவிழ்த்துவிடுவேன் என மிரட்டியுள்ளார் வில்லங்க அமைச்சர் விஜயபாஸ்கர்.
சர்ச்சைகளில் சிக்கியிருக்கும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக அமைச்சர்கள் பலரும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதற்காகவே தினகரனை சிறையில் சந்திக்கச் சென்றனர் கொங்கு மண்டல அமைச்சர்கள்.
அ.தி.மு.கவின் நிழல் ராஜ்ஜியத்தில் சேகர் ரெட்டியைவிட விஜயபாஸ்கரை வில்லங்கமாக பார்க்கிறது டெல்லி. அதனால் சசிகலாவோடு சேர்த்து அவருக்கு நெருக்கமான அமைச்சர்களையும் வீழ்த்தும் முடிவில் இருக்கிறது டெல்லி.
அமைச்சர்களும் எதிர்ப்பு
அதன் ஒருபகுதிதான் அமைச்சர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரும் வருமான வரித்துறையின் கடிதம். விஜயபாஸ்கரை விலக்கி வைக்க வேண்டும் என்பதில் மூத்த அமைச்சர்களும் உறுதியாக உள்ளனர்.
நானும் பேசட்டா?
ஆனால் தம்மைப் பதவியில் இருந்து தூக்க சதி நடக்கிறது எனக் கொதித்த அமைச்சர் விஜயபாஸ்கர், சேகர் ரெட்டி விவகாரத்தில் நான் மட்டும்தான் அயோக்கியனா? உங்களுக்கு எந்தப் பங்கும் இல்லையா? நீங்கள் என்னவெல்லாம் செய்தீர்கள் என்பதை நான் வெளியில் பேசுவேன். என்னை தூக்கும் தைரியம் உங்களுக்கு இருக்கிறதா? என கொந்தளித்திருக்கிறார்.
அந்த 20 எம்.எல்.ஏக்கள்
மேலும் கூவத்தூரில் என்னுடைய கட்டுப்பாட்டில் 20 எம்.எல்.ஏக்களைக் கொடுத்தார் சசிகலா. அவர்களிடம் நான் யார் எனக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். என்னைத் தாண்டி அவர்கள் செல்ல மாட்டார்கள். என் மீது கை வைத்தால் உங்களுடைய முதல்வர் பதவியும் காலியாகிவிடும் என எச்சரிக்கை விடுத்திருக்கிறார் விஜயபாஸ்கர்.
ஆடிப்போன விஜயபாஸ்கர்
ஆனால் விஜயபாஸ்கரை சமாதானப்படுத்த அமைச்சர்கள் முன்வரவில்லை. டெல்லியில் இருந்து உத்தரவு வருகிறது.. நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், சேகர் ரெட்டியோடு நீங்களும் ஜெயிலுக்குப் போக நேரிடும் எனக் கூறிவிட்டனர். இதனால் அடுத்து என்ன செய்வது? எனத் தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார் விஜயபாஸ்கர்.