மழைக்கு நடுவேயும் பம்பரமாய் சுழன்று நிவாரண பணியாற்றும் அமைச்சர்கள்.. ஆஸி. பயணத்தை ஒத்திவைத்த வேலுமணி
சென்னை: மழை வெள்ள பாதிப்பை சரி செய்ய தீயாய் வேலை பார்த்துக் கொண்டுள்ளார்கள் அமைச்சர்கள்.
சென்னையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மழை தொடர்பான ஆய்வுகளை நடத்தினார். தங்கசாலையில் மழை பாதிப்புகளை பார்வையிட்ட முதல்வர் அங்கிருந்து பழைய வண்ணாரப்பேட்டை மற்றும் ஆர்.கே.நகர் பகுதிகளிலும் மழை பாதிப்புகளை ஆய்வு செய்தார்.
இந்த நிலையில் இன்று அமைச்சர்கள் ஆங்காங்கு களமிறக்கப்பட்டனர். சென்னை தி.நகர் துரைசாமி சுரங்கப்பாதையில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, வீரமணி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

செல்லூர் ராஜு ஆய்வு
மாதவரத்தில் அமைச்சர்கள் காமராஜ், பெஞ்சமின் ஆய்வு நடத்தினர். ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், மழை பாதிப்புகள் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு நடத்தினார்.

கொட்டும் மழையிலும் நடவடிக்கை
கொடுங்கையூர் சத்தியமூர்த்தி நகரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் உணவு வழங்கினார். ஆவடியில் மழை பாதிப்புகள் குறித்து கொட்டும் மழையில் அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின் ஆய்வு நடத்தினர்.

விஜயபாஸ்கரும் ஆய்வு
பள்ளிப்பட்டு குடிநீர் நீரேற்று நிலையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். அமைச்சர் வேலுமணி தனது ஆஸ்திரேலிய பயணத்தை ஒத்தி வைத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மழை நீர் கால்வாய் குறித்த ஆய்வு செய்ய ஆஸ்திரேலியா செல்ல அவர் திட்டமிட்டிருந்தார்.

இந்த பக்கமும் பாருங்க
"3 மாதத்திற்கு முன்பே திட்டமிட்டதுதான் ஆஸ்திரேலியா பயணம், ஆனால் தற்போது பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது" என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்தார். அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் களத்தில் உள்ளதால், முக்கிய சாலைகளில் வெள்ள நீர் உடனுக்குடன் அகற்றப்பட்டது. அதேநேரம், புறநகர் பகுதிகளில் அமைச்சர்கள் அதிக கவனம் செலுத்தி அந்த மக்களுக்கு உரிய நிவாரணம் உடனடியாக கிடைக்க செய்ய வேண்டும் என்பதே மக்கள் கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications