சிறுமிகளை விபச்சாரத்தில் தள்ளிய வழக்கு: தலைமறைவாக உள்ள 9 புதுவை போலீசாரைப் பிடிக்க 10 தனிப்படைகள்!
புதுச்சேரி: சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய விவகாரத்தில் தொடர்புடைய போலீசாரின் வீடுகளில், தனிப்படை போலீசார் நள்ளிரவில் அதிரடி சோதனை நடத்தினர்.
புதுச்சேரியில் விபசார கும்பல் ஒன்று சிறுமிகளையும் விபசாரத்தில் ஈடுபடுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த விபசார கும்பலுடன் போலீஸ் அதிகாரிகள், போலீசார் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய புதுவை சி.ஐ.டி. போலீசார் , அடையாள அணிவகுப்பு நடத்தி, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட போலீசாரை கண்டுபிடித்தனர்.
இதில் இன்ஸ்பெக்டர்கள் யுவராஜ், சுந்தர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், பாட்சா, ஏட்டுகள் பண்டரி நாதன், குமாரவேல், போலீஸ்காரர்கள் செல்வகுமார், சங்கர் மற்றும் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் ஆகியோருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, பணியில் இருந்த 9 பேரையும் ஐ.ஜி.பிரவீன் ரஞ்சன் பணி இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்யவும் உத்தரவிட்டார்.
ஆனால், கைது செய்யப் படுவதற்கு முன்னதாகவே, இந்த விவகாரத்தில் தொடர்புடைய 9 போலீசாரும் தலைமறைவானார்கள். அவர்களைப் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கிடையில் தலைமறைவான போலீசார் முன்ஜாமீன் கோரி சென்னை ஹைகோர்ட்டில் மனுதாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த மனு மீதான விசாரணை இன்று அல்லது நாளை விசாரணைக்கு வரவுள்ளது. அப்படி விசாரணைக்கு வரும்பட்சத்தில் புதுவை சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் ஆஜராக வேண்டியிருக்கும். அப்போது நீதிபதிகள், போலீசாரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பக்கூடும்.
எனவே, அதற்கு முன்னதாகவே தலைமறைவாக உள்ள போலீசாரைக் கைது செய்யும் நடவடிக்கைகளில் புதுவை சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக 10 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தனிப்படைக்கும் இன்ஸ்பெக்டர்கள் தலைமை வகித்து விசாரித்து வருகின்றனர்.
நேற்று இரவு தலைமறைவாக உள்ள போலீசாரின் வீடுகளில் தனிப்படையினர் சோதனை நடத்தினர். இதில் 5 செல்போன்களைப் போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதன் மூலம் தலைமறைவாக உள்ள போலீசாரைக் கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு வேங்கடசாமி தலைமையில் போலீசார் கூட்டம் நடந்தது. இதில் தலைமறைவானவர்களை பிடிக்க வியூகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி செயல்பட்டு, இன்னும் ஓரிரு நாளில் தலைமறைவாக உள்ள போலீசாரைக் கைது செய்ய திட்டமிடப் பட்டுள்ளது.