செல்லாத ரூபாய் நோட்டுகளை கொடுத்து எல்லோருக்கும் பெட்ரோல், டீசல் போட சொன்ன மர்ம நபர்- நெல்லை 'பரபர'
வைகோ படம் பொறித்த பைக்கில் வந்த நபர், பெட்ரோல் பங்கில் பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அள்ளிக்கொடுத்து சென்ற சம்பவம் நெல்லையில் நடந்துள்ளது.
நெல்லை: திருநெல்வேலி மாநகரத்தின் இருவேறு பகுதிகளில் பெட்ரோல் பங்குகளில் அடையாளம் தெரியாத நபர் வந்து பணத்தை கொடுத்து வரும் வாகனங்களுக்கு இலவசமாக பெட்ரோல், டீசல் சப்ளை செய்ய கூறிச் சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வருமான கணக்கு காட்ட முடியாத பணத்தை என்ன செய்வது என பண முதலைகள் தவித்து வருகிறார்கள். கமிஷன் அடிப்படையில் பணத்தை வங்கியில் மாற்றித்தர அவர்கள் ஆள் பிடித்து வருகிறார்கள். ஆனால் இப்படி கமிஷனுக்கு ஆசைப்பட்டு தங்கள் கணக்குகளில் கருப்பு பணத்தை டெபாசிட் செய்வோரின் இந்த திடீர் வருமானத்தை ஐடி துறை கண்காணிக்கும். அதிக அளவில் பணத்தை டெபாசிட் செய்வோர் ஏற்கனவே வறுமைக்கோட்டுக்கு கீழுள்ளோராக இருந்தால் அந்த தகுதியும் பறிபோக வாய்ப்புள்ளது.

எனவே விழிபிதுங்கியுள்ள சிலர், பிறருக்கு அந்த பணம் பயன்படட்டுமே என்பதற்காக சாலையோரம், மைதானம் போன்றவற்றில் குவியலாக பணத்தை போட்டு தப்பியோடுகிறார்கள்.
இந்த நிலையில், நெல்லை புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள ஹெச்.பி. பெட்ரோல் பங்கிற்கு இன்று காலை ஒரு நபர் வந்து 50, 1000 ரூபாய் நோட்டுக்களை மொத்தமாக கொடுத்து, இங்கு வரும் ஆட்டோக்களுக்கு ஃபுல்லாக எரிபொருளை நிரப்பி விடுங்கள் என கூறிச் சென்றுவிட்டாராம்.
அதேபோல பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அங்கு வந்த ஆட்டோக்களுக்கு இலவசமாக எரிபொருள் கொடுத்துள்ளனர். இதனால் இன்ப அதிர்ச்சியடைந்த அவர்கள் தங்களது நண்பர்களுக்கும் தகவல் சொல்ல, அந்த பெட்ரோல் பங்கில் கூட்டமோ கூட்டம். தகவல் அறிந்து போலீசார் வருவதற்குள், 46 ஆயிரத்திற்கு எரிபொருள் வழங்கப்பட்டுவிட்டதாம். எஞ்சிய 4 ஆயிரத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
போலீசார் கூறுகையில், "மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புகைப்படம் பொறித்த புல்லட் பைக்கில் வந்தவர்கள் இந்த பணத்தை வழங்கிச் சென்றதாக பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தெரிவித்தனர்" என்றனர். இதேபோல, நெல்லை மேலப்பாளையம் பகுதியிலுள்ள ஒரு பெட்ரோல் பங்கிலும் இலவச பணம் கொடுக்கப்பட்டு அது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் இறுதி வருவதற்குள் இன்னும் என்னென்ன காட்சிகளை நாம் காண முடியுமோ தெரியவில்லை
இதனிடையே, நெல்லை மாநகர மதிமுக நிர்வாகி நிஜாம், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். மதிமுகவுக்கும், அவர்கள் தலைவரான வைகோவுக்கும் களங்கம் ஏற்படுத்த பிற கட்சியினர் யாரோதான் இதுபோன்ற விஷமத்தனத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து சிசிடிவி காட்சிகளை வைத்து உண்மை குற்றவாளியை கண்டுபிடித்து அம்பலப்படுத்தாவிட்டால் பெரும் போராட்டம் நடத்தப்போவதாகவும் எச்சரித்தார்.












Click it and Unblock the Notifications