மலையை காணவில்லை...கண்டுபிடித்து தரும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை: தேனியில் மலையை காணவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் வடிவேல் கண்ணும் கண்ணும் என்ற படத்தில் கிணற்றை காணவில்லை என்று புகார் கூறும் காமெடி பரபரப்பாக பேசப்பட்டது. அந்த காமெடியைத் தொடர்ந்து விஏஓ அலுவலகம் காணவில்லை, எங்கள் கிணற்றை காணவில்லை என கூறி சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட பல சம்பவங்கள் அரங்கேறின. அந்த வகையில் மலையை காணவில்லை என்று விநோத வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.
ஜெபமணிமோகன்ராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தேனி ஆட்சியர் அலுவலகம் பின்னால் இருந்த 250 அடி உயர மலையை காணவில்லை என்று கூறப்பட்டுள்ளது. 160 ஏக்கர பரப்பளவில் இருந்த மலை கிராவல் மண்ணுக்காக அழிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.500 கோடிக்கும் அதிகமாக முறைகேடு நடைபெற்றுள்ளதாக மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார். ஆட்சியர், மண்ணியல்துறை இயக்குனரிடம் கடந்த 2013ல் புகார் தந்தும் நடவடிக்கை இல்லை என்று தெரிவித்துள்ளார்.
ஜெபமணிமோகன்ராஜ் தொடர்ந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வு விசாரித்தது. ஒரு மாதத்துக்குள் மலை குறித்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு தலைமை நீதிபதி அமர்வு வழக்கை முடித்து வைத்தது.