சஸ்பெண்ட் செய்ய மட்டுமே சட்டசபை நடக்கிறது: கருணாநிதி கமென்ட்
சென்னை: ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் இடை நீக்கம் செய்யவும் மட்டுமே தமிழக சட்டசபை நடக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்சியில் 2 நாட்கள் நடைபெற்ற திமுக மாநில மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு, திங்கட்கிழமை மாலை கருணாநிதி,சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

கேள்வி:- மத்திய அரசின் நிதி நிலை பற்றி உங்கள் கருத்து?
கலைஞர்:- என்னுடைய கருத்தை இன்று மதியமே திருச்சியில் இருந்த வாறே வெளியிட்டிருக்கிறேன்.
கேள்வி:- அரிசி சேவை வரியை ரத்து செய்திருக்கிறார்களே?
கலைஞர்:- அரிசிக்கான வரியை ரத்து செய்திருப்பதை வரவேற்கத் தக்க அம்சம் என்று தெரிவித்திருக்கிறேன்.
கேள்வி:- சட்டப் பேரவையிலிருந்து துரைமுருகன் அவர்களை ஐந்து நாள் இடை நீக்கம் செய்திருக்கிறார்களே?
கலைஞர்:- சட்டப் பேரவையில் நடைபெறுகின்ற இது போன்ற விஷயங்கள் புதிதல்ல; இடை நீக்கம் செய்யப்படுவது, ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது என்ற இது போன்ற பணிகளைத் தான் தற்போது சட்டசபை ஆற்றிக் கொண்டிருக்கின்றது.
பஸ்கண்டக்டர் விமர்சனம்
அவையின் உரிமையை மீறும் வகையில் நடந்துகொண்டதாக, திமுக சட்டமன்றக் குழு துணைத் தலைவர் துரைமுருகனை 5 நாள்களுக்கு இடைநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் நேற்று உத்தரவிட்டார்.
கடந்த அக்டோபரில் நடைபெற்ற கூட்டத்தொடரின்போது, அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட தகவல்களை ஊடகங்களுக்கு தெரிவித்ததாக துரைமுருகன் மீதும் குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக அமைச்சர் கே.பி. முனுசாமி பிரச்சினை எழுப்பினார். துரைமுருகன், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்கள், பேரவைத் தலைவரின் அனுமதியின்றி சிறிய பஸ் குறித்து தவறான கருத்துகளை தெரிவித்து, அவையின் செயல்பாட்டிற்கு பாதகம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டனர் என்றும், அவையின் உரிமையை மீறும் செயல் என்பதால், மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்தப் பிரச்சினை, உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கை, சட்டப்பேரவைத் தலைவரிடம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், உரிமை மீறல் குழுவின் பரிந்துரைப்படி, துரைமுருகன் திங்கட்கிழமை முதல் 5 நாள்களுக்கு அவையிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்படுவதாக அறிவித்த சபாநாயகர், மு.க.ஸ்டாலினுக்கு கடும் எச்சரிக்கையும் விடுத்தார்.












Click it and Unblock the Notifications