ஜனநாயக விரோத அதிமுக அரசை முடிவுக்கு கொண்டுவர திமுக தயங்காது- ஸ்டாலின் எச்சரிக்கை
ஜனநாயக விரோத அதி்முக அரசை முடிவுக்கு கொண்டு வர திமுக தயங்காது என்று திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை: ஜனநாயக ரீதியில் போராடும் திமுகவை மிரட்டுவதன் மூலம் ஒடுக்கலாம் என்று அதிமுக அரசு பகல் கனவு காண்கிறது என்று முக ஸ்டாலின் தெரிவித்தார்.
இதுகுறித்து முக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:
ஜனநாயக ரீதியில் போராடும் திமுகவை மிரட்டலாம் என்று முதல்வர் பகல்கனவு காண வேண்டாம். ஜனநாயக விரோத அதிமுக அரசை முடிவுக்கு கொண்டுவர திமுக தயங்காது.
அதிமுக என்ற குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பவர் எடப்பாடி பழனிசாமி என்பது மக்களுக்கு தெரியும். விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அதற்கு தடை பெற்றது அதிமுக அரசு.
குடிமராமத்து பணி
குடிமராமத்து பணியை ஏதோ அதிமுகதான் கண்டுபிடித்தது போல் முதல்வர் எடப்பாடி பேசி வருவது வியப்பளிக்கிறது. குடி மராமத்து பணிகள் திமுக ஆட்சியில் போர் கால நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்டன. ஏரிகளை தூர்வார திமுகவினருக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று அதிகாரிகளை முதல்வர் மிரட்டுகிறார்.
கேடு கெட்ட செயல்
திமுகவின் தூர்வாரும் செயலை தடுக்கும் கேடு கெட்ட செயலை ஒரு முதல்வர் செய்கிறார். இதுவரை நடைபெற்ற குடிமராமத்து பணிகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட முதல்வர் தயாரா? ரூ. 40 கோடி லஞ்ச புகாரில் சிக்கியவரை டிஜிபியாக ஆக்கியவர் முதல்வர் எடப்பாடி.
நடவடிக்கை இல்லை
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது அமைச்சர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது அவர்களை பணி செய்யவிடாமல் தடுத்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
சட்டத்தின் ஆட்சியல்ல
ஒரே மாதத்தில் ரூ.5.16 கோடியை லஞ்சமாக பெற்ற சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சட்டத்தின் ஆட்சி என்று கூறிக் கொள்ள அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.