ஐபிஎல் போராட்ட வழக்கில் எம்எல்ஏ கருணாஸுக்கு அக்டோபர் 4 வரை 7 நாள் கஸ்டடி!
சென்னையில் ஐபிஎல் போராட்ட வழக்கில் எம்எல்ஏ கருணாஸுக்கு அக்டோபர் 4 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவல் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போராட்ட வழக்கில் எம்எல்ஏ கருணாஸுக்கு அக்டோபர் 4 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவல் விதிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மற்றும் காவல்துறையினரை அவதூறாக பேசிய வழக்கில் எம்.எல்.ஏ கருணாஸ் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த நுங்கம்பாக்கம் போலீசார், கடந்த 23-ம் தேதி அவரை கைது செய்தனர்.
இதனையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். இதனிடையே கருணாஸை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கக்கோரி எழும்பூர் கோர்ட்டில் போலீசார் மனுத்தாக்கல் செய்தனர்.
அந்த மனுவை நேற்று விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் கருணாஸை காவலில் விசாரிக்க அனுமதி மறுத்தது. இந்நிலையில், ஐபிஎல் போட்டியின் போது ரசிகர்களை தாக்கியது மற்றும் தடையை மீறி போராட்டம் நடத்தியது உள்ளிட்ட 2 வழக்குகளில் கருணாஸ் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதற்காக வேலூர் சிறையில் இருந்து அவர் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.
இந்நிலையில் ஐபிஎல் வழக்கில் எம்எல்ஏ கருணாஸுக்கு நீதிமன்ற காவல் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. எம்எல்ஏ கருணாஸை 7 நாள் காவலில் வைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதே நேரத்தில் கொலை முயற்சி வழக்கில் நீதிமன்ற காவல் விதிக்க எழும்பூர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதனிடையே கருணாஸ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவும் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
[ நானும் அதிமுக அரசை விமர்சித்துள்ளேன்.. என் நாக்கை அறுப்பாங்களா? மத்திய அமைச்சர் கேள்வி! ]