தொகுதி மக்களின் கருத்தை அறிந்து முடிவெடுப்பேன்.. வேடசந்தூர் எம்.எல்.ஏ
தொகுதி மக்களின் கருத்தை அறிந்து முடிவு எடுப்பேன் என்று வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. பரமசிவம் தெரிவித்துள்ளார்.
சென்னை: வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி மக்களின் கருத்தை அறிந்து நல்ல முடிவெடுப்பேன் என்று அத்தொகுதியின் எம்.எல்.ஏ. வி.பி.பி. பரமசிவம் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக இரண்டாக பிளவுபட்டு ஓபிஎஸ் ஒரு அணியாகவும், சசிகலா மற்றொரு அணியாகவும் உள்ளனர். பிரிந்து கிடக்கும் நிலையில், எம்எல்ஏக்கள் ஆதரவு யாருக்கு என்பதை ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் சொல்லாமல் அமைதி காத்தி வருகிறார்கள்.
எங்கே ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு என்று சொல்லிவிடுவார்களோ என்று பயந்து கொண்டிருக்கும் மன்னார்குடி கோஷ்டி எம்எல்ஏக்களை கூவத்தூரில் உள்ள 'கோல்டன் பே' என்ற ரிசார்ட்டில் அடைத்து வைத்துள்ளனர். 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் சசிகலா மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே வேடசந்தூர் தொகுதி எம்எல்ஏ பரமசிவத்திற்கு தொகுதி மக்கள் தங்களது செல்போன் மூலம் எஸ்.எம்.எஸ். மற்றும் வாட்ஸ் அப் மூலம், ஓபிஎஸ்ஸை ஆதரிக்க வேண்டும் என்ற தகவல்களையும் அனுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் எம்.எல்.ஏ. பரமசிவத்திற்கு வேடசந்தூர் தொகுதி வாசி ஒருவர் ஓ.பன்னீர் செல்வத்து ஆதரவு அளிக்கக்கோரி தொலைபேசி மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கு அவர் அளித்துள்ள பதிலில், இரண்டு தினங்களில் வேடசந்தூர் வந்துவிடுவதாகவும், மக்களுக்காக செயல்படுவேன் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும், மக்களின் கருத்தை அறிந்து முடிவை அறிவிப்பேன் என்றார்.