முதல்வரை மாற்ற வலியுறுத்தி ஆளுநரிடம் கடிதம் கொடுத்த தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏக்கள்!
Recommended Video
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இல்லை; அவரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏக்கள் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் இன்று கடிதம் அளித்தனர்.
எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சேர்ந்து கொண்டு தினகரன் தரப்பை ஒத்தி வைத்துவிட்ட நிலையில், கோபமடைந்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரும் இன்று ராஜ்பவனில் வித்யாசாகர் ராவை சந்தித்தனர். அப்போது அவர்கள் ஒரு கடிதம் அளித்தனர்.
அந்த கடிதம் குறித்து செய்தியாளர்களிடம் கூறிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்செல்வன், அரசு மீது எங்களுக்கூ நம்பிக்கை இல்லை என ஆளுநரிடம் மனு தரவில்லை.
தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதுதான் எங்களுக்கு நம்பிக்கை இல்லை; அவரை மாற்ற வேண்டும் என்று ஆளுநரிடம் மனு கொடுத்துள்ளோம் என்றார்.
மேலும் ஆளுநரிடம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கொடுத்த கடிதத்தில், எம்.எல்.ஏக்களின் ஆதரவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இழந்துவிட்டார்; ஆகையால் சட்டசபையை உடனே கூட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே அதிமுக எம்.பி. மைத்ரேயனும் ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று சந்தித்து பேசினார்.