ஓபிஎஸ் மீது மோடி அதிருப்தி? நாளை மறுநாள் எடப்பாடியுடன் சந்திப்பு
Recommended Video
சென்னை: டிடிவி தினகரனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துள்ளது பிரதமர் மோடிக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தன்னை ஓ பன்னீர்செல்வம் வந்து சந்தித்தார் என்று டிடிவி தினகரன் நேற்றுப் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த நிலையில், இதுகுறித்து இரவு பேட்டியளித்த
பன்னீர்செல்வம் அந்த தகவலை உறுதி செய்தார்.
கட்சியை காப்பாற்றுவதற்காக, நல்ல செய்தியை எதிர்பார்த்து சென்றதாகவும், ஆனால் தினகரன் கட்சியை கைப்பற்றும் நோக்கத்திலேயே பேசி வந்ததாகவும் பன்னீர்செல்வம் தனது பேட்டியில் தெரிவித்தார்.
தர்மயுத்த காலம்
இந்த சந்திப்பு நடைபெற்றது 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் தேதி என்று பன்னீர்செல்வமே ஒப்புக் கொண்டுள்ளார். இந்த காலகட்டத்தில் சசிகலா குடும்பத்திற்கு எதிராக அவர் தர்ம யுத்தம் என்ற பெயரில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார். ஆனால் சசிகலா குடும்பத்தின் முக்கிய உறுப்பினரும் சென்று பன்னீர்செல்வம் சந்தித்துள்ள விவகாரம், ஓராண்டு தாண்டிய பிறகு இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பதவி நீக்கம்
ஓ.பன்னீர் செல்வம் தனக்கு நெருக்கமானவர்களுக்கு கூட தெரிவிக்காமல் தினகரனை சந்தித்ததாகவும் பிரஸ்மீட்டில் தெரிவித்தார். இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பும் அதிர்ச்சியில் உள்ளது. ஏனெனில் எடப்பாடி பழனிச்சாமியை பதவியில் இருந்து நீக்குமாறுதான், தினகரனை பன்னீர்செல்வம் சென்று சந்தித்ததாக தினகரன் கூறியிருந்தார். இதை பன்னீர்செல்வம் மறுத்துள்ளார். அணிகள் இணைப்புக்கு முன்புதான் இந்த சந்திப்பு நடைபெற்றது என்ற போதிலும் கூட எடப்பாடியை பதவி நீக்கம் செய்ய நான் கூறவில்லை என்று பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
மோடி விருப்பம்
ஆனால், பிரதமர் மோடி தெரிவித்து தான் அதிமுக இணைப்புக்கு நான் ஒப்புக்கொண்டேன் என்று பன்னீர்செல்வம் முன்பு ஒருமுறை கூறியிருந்தார். எனவே எடப்பாடி பழனிச்சாமி தரப்புடன், பன்னீர்செல்வம் இணைந்து போதைதான் மோடி விரும்பியுள்ளார் என்பது ஊர்ஜிதமாகியது. ஆனால் மோடி விருப்பத்திற்கு மாறாக தினகரனை யாருக்கும் தெரியாமல் பன்னீர்செல்வம் சென்று சந்திப்பது என்பது மோடி கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அதிமுக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜக தலைமை
சசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்தை அதிமுகவில் இருந்து விலக்க வேண்டும், தங்கள் கொள்கையைகளுடன் இணைந்து செல்லக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான அதிமுக செயல்பட வேண்டும் என்பது பாஜக தலைமையில் திட்டமாக இருந்ததாகக் கூறப்படுவது உண்டு. ஆனால் இதற்காகவே பன்னீர்செல்வத்தை பிரதமர் மோடி முன்பெல்லாம் அடிக்கடி சந்தித்து வந்தார். ஆனால் இப்போது யாருக்கும் தெரியாமல் தினகரனை பன்னீர்செல்வம் சென்று சந்தித்தது என்பது பாஜக தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமருடன் சந்திப்பு
இந்த நிலையில்தான் நாளை மறுநாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார் இந்த பயணத்தில் பன்னீர்செல்வத்தை உடன் அழைத்துச் செல்லவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. மோடியுடனான பேச்சின்போது தினகரன் எழுப்பி இந்த விவகாரம் குறித்து முதல்வர் பிரதமர் மோடியுடன் ஆலோசனை செய்யக் கூடும் என்று தெரிகிறது இதன் மூலம் பன்னீர்செல்வத்திற்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.