எனக்கு மோடிதான் பிக் பாஸ்!- சசி குடும்பத்துக்கு எடப்பாடியின் பைனல் வார்னிங்
என்னுடைய பிக்பாஸ் பிரதமர் மோடி மட்டுமே என்று சசிகலா குடும்பத்தினருக்கு அழுத்தமாக பதிய வைத்துள்ளாராம் முதல்பர் எடப்பாடி பழனிச்சாமி.
சென்னை: எனக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடிய ஒரே அதிகாரம் பிரதமருக்கு மட்டுமே உள்ளது. அவரைத் தவிர வேறு யாராலும் என்னுடைய ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்த முடியாது' என தினகரனின் தரப்பிடம் அழுத்தமாகக் கூறிவிட்டாராம் எடப்பாடி பழனிச்சாம்.
டி.டி.வி.தினகரனின் மாமியார் சந்தான லட்சுமியின் மறைவு நாள் நிகழ்வில், சசிகலா குடும்பத்தினர் கை குலுக்கியதை அதிர்ச்சியோடு கவனித்தனர் அமைச்சர்கள்.
அடுத்து வந்த நாட்களில், எம்.எல்.ஏக்களை சந்திப்பது, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசிப்பது என பரபரப்பாக இருப்பதைப் போலக் காட்டிக் கொண்டார் தினகரன். அவரால் புதிதாக கட்சிப் பதவிக்கு நியமிக்கப்பட்டவர்களில் சிலர், அந்தப் பதவியை உதறிவிட்டனர். தங்க.தமிழ்ச்செல்வனால் பதவிக்கு வந்த கதிர்காமு
எம்.எல்.ஏவும், ' உடல்நிலை காரணமாக மருத்துவ அணியின் இணைச் செயலாளர் பொறுப்பில் என்னால் செயல்பட முடியாது. ஓரணியாக அனைவரும் செயல்பட வேண்டும்' என கருத்து கூறிவிட்டு ஒதுங்கிவிட்டார்.
70 எம்எல்ஏக்கள்
இதுநாள் வரையில், ' எடப்பாடி பழனிசாமி நம் பக்கம் இருக்கிறார். நாம் சொல்வதைக் கேட்கும் முதல்வராக இருக்கிறார்' என சசிகலாவிடம் வக்காலத்து வாங்கிய, திவாகரனால் கொங்கு டீமின் அதிரடியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எங்கள் பக்கம் 70 எம்.எல்.ஏக்கள் வரையில் உள்ளனர்.
திவாகரன் கொதிப்பு
நாங்கள் அமைதியாக இருப்பதால்தான், அமைச்சர் பதவியில் நீங்கள் வலம் வருகிறீர்கள். இந்த ஆட்சியைக் கலைக்க எங்களுக்கு ஒருநாள் போதும்' என எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் கொதித்திருக்கிறார் திவாகரன்.
எடப்பாடி பழனிச்சாமி அதிரடி
இதனை எதிர்பார்த்த எடப்பாடி பழனிசாமியோ, ' எனக்கு மோடிதான் பிக் பாஸ். டெல்லி நினைத்தால் மட்டுமே என்னை ஆட்சியில் இருந்து நீக்க முடியும். அதே டெல்லி நினைத்தால், உங்கள் கதி என்னவாகும் என்பதையும் நினைத்துப் பாருங்கள். நீங்கள் அரசியலை விட்டே ஒதுங்கி இருக்க வேண்டும் என மேலிடம் நினைக்கிறது.
திவாகரன் அதிர்ச்சி
அதைவிட்டு, எனக்கு நீங்கள் சவால்விட்டுக் கொண்டிருந்தால், நடக்கப் போகும் விளைவுகளை எதிர்கொள்ளவும் தயாராக இருங்கள்' எனக் கண்டிப்புடன் கூறிவிட்டார். இப்படியொரு வார்த்தையை திவாகரன் எதிர்பார்க்கவில்லை. இதையடுத்து, அடுத்துச் செய்ய வேண்டிய பணிகள் குறித்து தினகரனுடன் விவாதித்து வருகிறார்.
முதல்வரின் உத்தரவு
அ.தி.மு.க கட்சி அலுவலகத்தை நோக்கிச் செல்லும் அளவுக்கு தினகரனுக்கு இன்னமும் தைரியம் வரவில்லை. ' சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் கைது செய்ய தயங்க வேண்டாம்' என டிஜிபி ராஜேந்திரனுக்கு உத்தரவிட்டுள்ளார் முதல்வர். கட்சி அலுவலகத்துக்கும் அதிக பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
கொள்ளையடித்த பணம்
சசிகலா குடும்பத்தினரின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் தினகரனிடம் பேசிய கட்சி நிர்வாகி ஒருவரும், நம்முடைய காலில் விழுந்து பதவி பெற்றவர்கள் எல்லாம், இப்போது சுயரூபத்தைக் காட்டிவிட்டனர். அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு கொள்ளையடித்த பல்லாயிரம் கோடிகளைக் காப்பாற்ற டெல்லி காலில் விழுந்து கிடக்கிறார்கள். மோடிக்கு எதிராகப் பேசினால், கைதாவோம் எனப் பயப்படுகிறார்கள்.
எடப்பாடி அரசு
மோடி சொன்னால், நம்மைக் கைது செய்யவும் இவர்கள் தயங்க மாட்டார்கள். ஆட்சியைக் கவிழ்த்தால், இவர்கள் எல்லாம் சொந்த ஊருக்கே ஓடிப்
போய்விடுவார்கள். அடுத்து நாம் எடுக்கக் கூடிய முடிவு, எடப்பாடி ஆட்சிக்கான இறுதி மணியாக இருக்க வேண்டும்' எனக் கொதிப்பைக் காட்டியிருக்கின்றனர்.
உளவுத்துறை
இதே கருத்தைத்தான் தினகரனை சந்திக்க வரும் நிர்வாகிகளும் பேசி வருகின்றனர். இந்தப் பேச்சுக்கள் எல்லாம் உளவுத்துறை மூலம் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படுகின்றன கட்சி அலுவலகத்துக்குள் கால் எடுத்து வைக்கட்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம்' என்ற மனநிலையில் இருக்கிறார் முதல்வர்.
திவாகரன் திட்டம்
எப்போதும் திரைமறைவில் இருந்தே இயங்கி பழக்கப்பட்ட திவாகரனுக்கு, எடப்பாடியின் நேரடி எச்சரிக்கை கூடுதல் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. 'என்னுடைய பலம் என்னவென்று விரைவில் காட்டுகிறேன்' என டெல்லி நட்புகளைத் தேடி ஓடத் தொடங்கியிருக்கிறார் திவாகரன்" என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.