மோடி அணிந்த 10 லட்ச ரூபாய் கோட்-சூட்டால்தான் டெல்லி தேர்தலில் பாஜக தோற்றது: நல்லகண்ணு
விழுப்புரம்: டெல்லி தேர்தலில் பாஜக படுதோல்வி அடைய காரணம், அமெரிக்க அதிபர் ஒபாமாவை வரவேற்க சென்ற மோடி ரூ.10 லட்சம் மதிப்புள்ள கோட் அணிந்திருந்ததுதான் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் விழுப்புரம் மாவட்ட மாநாடு செஞ்சியில் நடந்தது. மாநாட்டின் முடிவில் நடந்த பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
மத்தியில் ஆளும் பாஜக அரசு முதலாளிகளுக்கு உதவும் ஆட்சியாகும். தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை ஓராண்டு ஆகியும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை.
பல திட்டங்கள் நிறுத்தம்
ஆனால் அதைவிடுத்து, ஜாதி, மத கலவரங்களை தூண்டிவிடுகிறது. ஏழைகளுக்கு ரேஷன் பொருட்களை முறையாக தரவில்லை. காஸ் மானியத்தை ரத்து செய்துவிட்டது. பாஜக அரசு பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய மக்களின் அன்றாட வாழ்வாதாரமான மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை நிறுத்திவிட்டது. இதன் மூலம் 40 ஆயிரம் கோடியை மிச்சப்படுத்தியதாக கூறும் மத்திய அரசு, வெறும் 2 முதலாளிகளுக்கு ரூ. 1 லட்சம் கோடியை சலுகையாக வழங்கி உள்ளது.
கோட்-சூட் துறந்த காந்தி
மகாத்மா காந்தி கோட்டு, சூட்டு அணிந்து மதுரை வந்தபோது விவசாயிகள் வேட்டி, துண்டு அணிந்திருந்தததை பார்த்துவிட்டு அவரும் வேட்டி, துண்டு அணிய ஆரம்பித்தார்.
இந்த விளம்பரம் அவசியம்தானா?
ஆனால் டீக்கடை தொழிலாளி என சொல்லிக்கொள்ளும் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டெல்லி வந்தபோது ரூ. 10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தினால் பெயர் பொறித்த கோட்டு, சூட்டு அணிந்திருந்தார்.
டெல்லி மக்கள் பாடம் புகட்டினர்
இப்படி ஒரு கோட் போட்டவர்கள்தான் எளிமையை பற்றி பேசுகின்றனர். இதனால்தான் மோடிக்கு தோல்வியை தர டெல்லி மக்கள் முடிவெடுத்து பிரதமர் மோடிக்கும், பாரதிய ஜனதாவுக்கும் தேர்தலில் நல்ல பாடம் தந்துள்ளனர். இவ்வாறு நல்லக்கண்ணு பேசினார்.