ஈழத்தமிழர் பிரச்சனையில் வாஜ்பாய் அணுகுமுறையை மோடியும் பின்பற்றுவார்: மதிமுக மல்லை சத்யா நம்பிக்கை
சென்னை: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் கடைபிடிக்கப்பட்ட ஈழத் தமிழர் அணுகுமுறையை வருங்காலத்தில் மோடி தலைமையிலான மத்திய அரசும் பின்பற்றும் என்று மதிமுக துணைப் பொதுச்செயலர் மல்லை சத்யா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை வண்டலூரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மதிமுக துணைப் பொதுச்செயலர் மல்லை சத்யா பேசியதாவது:
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு 1964 ஆம் ஆண்டு, இதேபோன்ற ஒரு மக்கள் கடலுக்கு முன்னால் பேரறிஞர் அண்ணா சொன்னார்: ஆல மரத்தடியில் நின்று கொண்டு, உன் கண்ணுக்கு என்ன தெரிகிறது? என்று துரோணாச்சாரியார் கேட்டபோது, வில் விஜயன் அர்ஜூனன் சொன்னான்: குருநாதரே, என் கண்ணுக்கு எதுவுமே தெரியவில்லை; அம்பின் நுனியும் குருவியின் கழுத்தும் மட்டும் தெரிகிறது என்றான்.
அதுபோலத் தம்பிமார்களே, வரப்போகின்ற பொதுத் தேர்தலில் உங்கள் கண்ணுக்குத் தெரிய வேண்டிய ஒரே இலக்கு, காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவது ஒன்றுதான் என்றார்.
அதுபோலத் தோழர்களே, இன்று நம் கண்ணுக்குத் தெரிய வேண்டிய ஒரே இலக்கு, நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில், மக்கள் விரோதக் காங்கிரஸ் கட்சியை, டெல்லி அதிகார பீடத்தில் இருந்து , மத்திய அதிகார பீடத்தில் இருந்து அதல பாதாளத்துக்குத் தூக்கி எறிவதுதான்.
வில்லினை எடடா அந்தப் புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடவே என்று முண்டாசுக் கவிஞன் பாரதி பாடியவாறு, 11 அக்ரோணிச் சேனைகளையும் சிதறடித்து வீழ்த்திய அர்ஜூனனைப் போல, நரேந்திர மோடி நேர்மை என்னும் காண்டீபம் ஏந்தி நிற்கிறார். அவரே வெல்வார்.
அதனால்தான், வைகோ நாடெங்கும் நரேந்திர மோடி அலை வீசுகிறது; அவர்தான் அடுத்த பிரதமர். பாரதிய ஜனதா கட்சி மட்டுமே 270 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்றார். அது நடக்கத்தான் போகிறது.
சோனியா காந்தி இயக்குகின்ற கைப்பாவை மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, தமிழ்நாட்டுக்குக் கேடு செய்தது. தமிழக மீனவர்கள் 578 பேர்களைப் படுகொலை செய்த இலங்கை அரசோடு கைகோர்த்துக் கும்மாளம் போடுகிறது. ஆயுதங்களும், ஆயிரம் கோடிப் பணமும் அளித்து, இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்த கூட்டுக்குற்றவாளிதான் காங்கிரÞ அரசு.
அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, ‘இலங்கை அரசு பணம் கொடுத்தாலும் இந்தியா ஆயுதங்களை விற்பது இல்லை' என்று முடிவு எடுத்தார்.
எனவே, அமையப் போகும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, ஈழத்தமிழர் பிரச்சினையில் வாஜ்பாய் கடைப்பிடித்த அதே அணுகுமுறையைப் பின்பற்றும் என்று, மறுமலர்ச்சி தி.மு.கழகம் நம்புகிறது.
குஜராத் மாநிலத்தில், இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், சிறுபான்மை மக்கள் இன்றைக்கு நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ்கிறார்கள் என்பதுதான் உண்மை.
ஊழல் சாம்ராஜ்யம் நடத்துகின்ற காங்கிரஸ் கட்சி, மாநிலங்களின் அதிகாரங்களை எல்லாம் கபளீகரம் செய்த ஆக்டோபஸ் ஆகவும், மாநிலங்களின் உரிமைகைளை நசுக்குகின்ற எதேச்சாதிகாரியாகவும், மத்திய அரசை இயக்கி வருகிறது.
மத்தியில் குவிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும். இந்தியாவில் உண்மையான கூட்டு ஆட்சி மலர வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் வலுப்பெறும்.
நரேந்திர மோடி அவர்கள் அமைக்கப் போகும் அரசு அத்தகைய கூட்டு ஆட்சியை மலரச் செய்து, சமூக நீதியையும், மதச்சார்பு இன்மையையும் சிறுபான்மை மக்களையும் பாதுகாத்து, தமிழக மீனவர்களின் துன்பத்தைப் போக்கி, விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்து, நேர்மையான அரசியலை நிலைநாட்டும்.
இவ்வாறு துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா உரையாற்றினார்.