ஜெயலலிதா சொல்வதை நீங்க நம்பறீங்களா? சொல்லுங்க… மக்களிடம் கேட்ட ஸ்டாலின்
விருதுநகர்: ஜெயலலிதா சட்டசபையில் பேசுவதெல்லாம் பொய்... அண்டப்புளுகு ஆகாச புளுகு... ஜமுக்காளத்தில வடிகட்டின பொய் என்று போட்டுதாக்கியுள்ளார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறுவதை நீங்க நம்பறீங்களா? என்றும் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் போகுமிடங்களில் எல்லாம் கேட்டு வருகிறார் ஸ்டாலின்.
குமரியில் தொடங்கிய நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணம் ஒருவித பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள், மூத்த குடிமக்கள், மாணவர்கள் என அனைவரையும் சந்தித்து வரும் ஸ்டாலின் வியாழக்கிழமை விருதுநகர் மாவட்டத்தில் தனது பயணத்தை தொடங்கினார்.
போகுமிடங்களில் எல்லாம் அந்த ஊரின் சிறப்பான உணவுகளை ருசி பார்க்க தவறுவதில்லை ஸ்டாலின், திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா டேஸ்ட் பார்த்த ஸ்டாலின், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவை நேற்று ருசித்தார்.
ராஜபாளையத்தில் ஸ்டாலின்
ராஜபாளையம் வனவிலங்குகள் மீட்பு மையத்துக்கு 9.25 மணியளவில் சென்றார். அங்கு மையத்தை பார்வையிட்டார் கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் 9.36 மணியளவில் ஜவஹர் மைதானம், மெயின் பஜார் வழியாக ராஜபாளையம் சந்தைக்கு சென்றார். அங்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுடன் உரையாடினார். அவர்கள் கூறிய குறைகளை கேட்ட ஸ்டாலின் அரசு மருத்துவமனை முன்பு அமைக்கப்பட்டிருந்த மேடையில் பேசினார்,
நூற்பாலை தொழிலாளர்கள்
திருவில்லிபுத்தூர் சாலையில் உள்ள நூற்பாலைக்கு சென்றார். அதனை பார்வையிட்டு தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். அவர்கள், ஸ்டாலினிடம் தங்கள் குறைகளை எடுத்துக் கூறினர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபயணம்
ராஜபாளையத்தில் இருந்து திருவில்லிபுத்தூர் சென்ற ஸ்டாலின், கிழக்கு ரதவீதியில் உள்ள ஓட்டலில் டீ அருந்தியபடி பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.
பால்கோவா டேஸ்ட்
அங்கிருந்து நடந்து சென்று ஒரு பால்கோவா கடையில், கட்சியினர் மற்றும் மாணவ, மாணவிகளிடம் சேர்ந்து பால்கோவா சாப்பிட்டார். அங்கிருந்து அருணாசல வள்ளியம்மாள் திருமண மண்டபம் சென்ற ஸ்டாலின், அங்கு பால் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடினார்.
நெசவாளர்களுடன் ஸ்டாலின்
பின்னர் நெசவாளர் காலனிக்கு நடந்து சென்று, அங்கிருந்த நெசவாளர்களின் குறைகளை கேட்டவர், ஆர்வத்தோடு நூல் நூற்றார். ஸ்டாலின் லாவகமாக நூல் நூற்றதை பெண்கள் ஆர்வத்துடன் ரசித்தனர். இதனைத் தொடர்ந்து சிவகாசிக்கு கிளம்பினார்.
பட்டாசு தொழிலாளர்கள்
சிவகாசி நெடுஞ்சாலையில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர்களுடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார். பகல் 12.30 மணியளவில் சிவகாசி பஸ் நிலையம் முன்பாக பொதுமக்கள் மத்தியில் பேசினார்.
சாத்தூரில் நடை
சாத்தூர் சென்ற ஸ்டாலின் பழைய பாலத்திலிருந்து மெயின்ரோடு வழியாக நடந்து சென்று முக்குராந்தலில் பொதுமக்கள் மத்தியில் பேசினார். பின்னர் மிளகாய் வத்தல் மண்டபத்தில் தீப்பெட்டி, பட்டாசு, பேனா, நிப் மற்றும் அரிசி மில் தொழிலாளார்களை சந்தித்து பேசி குறைகளை கேட்டார்.
விருதுநகரில் ஸ்டாலின்
துலுக்கப்பட்டி ராம்கோ சிமென்ட் ஆலையில் மதியம் சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.தொடர்ந்து மாலை 3.50 மணியளவில் விருதுநகர் சென்ற ஸ்டாலின் நகராட்சி ரோட்டில் உள்ள கடையில் டீ குடித்து விட்டு பொதுமக்களை சந்தித்து பேசினார். பின்னர் மெயின் பஜார் வழியாக சென்று தேசபந்து மைதானத்தில் பொதுமக்கள் மத்தியில் பேசினார்.
ஒரு மணி நேர முதல்வர்
விருதுநகர் கந்தசாமி மண்டபத்தில் மூத்த குடிமக்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுடன் கலந்துரையாடிய ஸ்டாலின், தமிழ்நாட்டில் தமிழ்நாட்டில் ஆட்சி நடைபெறுகிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது என்றார். ஒருநாள் முதல்வர் போல ஒருமணிநேரம் மட்டுமே சட்டசபைக்கு போகும் முதல்வர் இருக்கிறார். அவர் எந்த வித பணிகளையும் செய்வதில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
சாயப்பட்டறையில் ஸ்டாலின்
எஸ்எஸ்கே மண்டபத்தில் விருதுநகர் மாவட்ட முக்கிய பிரமுகர்களுடன் டீ குடித்தபடி உரையாடிய ஸ்டாலின், மாலையில் அருப்புக்கோட்டை சென்று அங்குள்ள உள்ள சாயத்தொழிற்சாலை மற்றும் பவர்லூமை பார்வையிட்டார்.
திரி சுற்றும் தொழிலாளர்கள்
சவுண்டம்மன் கோயில் மண்டபத்தில் திரி சுற்றும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். மேடையில் ஜமுக்காளம் விரித்து அதில் அமர்ந்து பேசிய ஸ்டாலின் மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
நீங்க நம்பறீங்களா?
இரவில் வேன் மீது நின்று கொண்டு பேசிய ஸ்டாலின், தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு இல்லை என்று சொல்வதை நீங்க நம்பறீங்களா என்று கேட்டார். 1989ம் ஆண்டில், திமுக ஆட்சியில் தான் மகளிர் சுய உதவிக்குழுக்கள் துவங்கப்பட்டது. ஆனால், சட்டசபையிலேயோ, மகளிர் சுயஉதவிக் குழுக்களை அதிமுக தான் துவக்கியது என்று முதல்வர் ஜெயலலிதா கூறிவருகிறார். இது அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு என்றார்.
உற்சாக வரவேற்பு
ஸ்டாலின் போகுமிடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் கூடுகிறது. பொதுமக்கள் மனுக்களை வழங்குவது மட்டுமல்லாது நேரடியாகவும் குறைகளை தெரிவிக்கின்றனர். முதியோர் உதவித் தொகை கிடைப்பதில்லை என்பது மிக முக்கிய கோரிக்கையாக இருக்கிறது.