கொசு இல்லா இல்லம் - டெங்குவை ஒழிக்க அமைச்சர் விஜயபாஸ்கரின் புதிய திட்டம்!
சென்னையில் 'கொசு இல்லா இல்லம்' என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது.
சென்னை: சென்னையில் கொசுக்களை ஒழிக்கும் வகையில் கொசு இல்லா இல்லம் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி உடன் இணைந்து சுகாதாரத்துறை வீடுகளின் அருகில் தூய்மைப்பணியில் ஈடுபட்டு வருகிறது.
சென்னையில் டெங்குவின் தாக்கம் அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் டெங்கு அறிகுறிகளுடன் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
டெங்கு மரணங்கள்
டெங்கு காய்ச்சலால் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை மரணமடைந்து வருவதால் மக்கள் பீதிக்கு ஆளாகியுள்ளனர். அரசு தரப்பில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரச் செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறிவருகின்றனர்.
கொசு இல்லா இல்லம்
'கொசு இல்லா இல்லம்' என்கிற புதிய திட்டத்தை சென்னையில் இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்துள்ளனர்.
இத்திட்டத்தில் மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை இணைந்து சென்னையில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ள உள்ளனர். அதன் தொடக்கமாக சென்னை கே.கே.நகரில் இன்று சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் காய்ச்சல் வந்தால் மருத்துவரிடம்தான் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
சுய மருத்துவம் செய்து கொள்ளக் கூடாது. மருந்தகங்களும் மக்களுக்கு மருந்து சீட்டு இல்லாமல் மாத்திரைகள் கொடுக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார்.