படுகாயமடைந்த நிலையிலும் குழந்தைக்கு பாலூட்டிய தாய் - நாகர்கோவில் விபத்தில் நெகிழ்ச்சி!
நாகர்கோவில் : நாகர்கோவிலில் நேற்று நடைபெற்ற விபத்தில் படுகாயமடைந்த தாய் ஒருவர் அந்த நிலையிலும் குழந்தைக்கு பாலூட்டிய சம்பவம் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
பணகுடி அருகே நேற்று நடந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் குமரி ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டனர்.
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு காலை 6 மணியில் இருந்தே படுகாயம் அடைந்தவர்கள் ஆம்புலன்சுகளில் கொண்டு வரப்பட்டனர். அவர்கள் உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்காக டாக்டர்கள் குழுவினர், பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள் தயார் நிலையில் இருந்தனர்.
காயமடைந்தவர்களுக்கு அவசர, அவசரமாக சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் படுகாயம் அடைந்த பெண்ணின் மார்பில் குழந்தை தூங்கியவாறு இருந்தது. அந்த குழந்தையை செவிலி ஒருவர் எடுத்த போது கதறி அழுதது. அதன் பிறகே குழந்தை , தாயிடம் பால் குடித்து கொண்டிருந்தது தெரிய வந்தது.
உயிருக்கு போராடிய நிலையிலும், அழுது கொண்டிருந்த தனது குழந்தைக்கு அந்த பெண் பால் கொடுத்து கொண்டிருந்தது தெரிய வந்தது.இந்த காட்சியை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் நெகிழ்ச்சியில் கண்ணீர் சிந்திய சம்பவம் அனைவர் மனதையும் உருக்கியது.